சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் கோழிகளை வாங்கிக் குவித்ததை அடுத்து பல்வேறு ஈரச்சந்தைகளிலும் பேரங்காடிக் கடைகளிலும் ஐஸ்ஸில் வைக்காத கோழி இருப்பில் இல்லை.
வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், கோழிகளை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று மலேசியா இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
அதனால் சிங்கப்பூரில் கோழிகளுக்கான தேவை அதிகமாகி உள்ளது.
பிடோக், கிம் மோ, பீஷான், மெக்பர்சன் போன்ற இடங்களில் உள்ள ஈரச்சந்தைகளில் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் அனைத்துப் புதிய கோழிகள் விற்று முடிந்துவிட்டன என்று கோழி விற்பனையாளர்கள் கூறினர்.
வழக்கமாக 11, 12 மணிக்குத் தான் கோழி விற்று முடிந்துவிடும் என்று அவர்கள் கூறினர்.
சில பேர் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு கோழிகளை வாங்கிச் சென்றனர் என்றும் கடைக்காரர்கள் கூறினர்.
இத்தனை கோழிகளைத் தான் வாங்கலாம் என்று கட்டுப்பாடு விதிக்க கடைக்காரர்கள் இப்போதைக்கு திட்டமிடவில்லை.
பேரங்காடிக் கடைகளிலும் உறையாத புதிய கோழிகள் கிட்டத்தட்ட விற்று முடிந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
பிடோக்கில் உள்ள ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ், ஜாயன்ட் கடைகளில் குளிர்ப்பதனப் படுத்தப்பட்ட கோழிதான் எஞ்சி இருந்தது.
வாடிக்கையாளர்கள் சிலர், வரும் வாரங்களில் உறைந்த கோழியின் விலை உயரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினர்.