அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நிகழ்ந்த கொடூர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் மாண்டனர். அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
18 வயது ஆடவர் ஒருவர் டெக்சஸின் உவால்டி நகரில் உள்ள ரோப் தொடக்கப் பள்ளிக்குள் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டதாக அதிகாரிகள் கூறினர். மெக்சிகோ எல்லை அருகே உள்ள சிறிய நகரம் இது. தாக்குதலில் ஈடுபட்ட ஆடவர், சால்வடோர் ரமோஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடிமகனான அவர் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்ற விவரம் தெரியவில்லை. கைது செய்யப்படுவதற்கு முன்னர் காவல்துறை
யினர் சுட்டதில் அவர் மாண்டுவிட்டார்.
"முதல் சம்பவம் அந்த ஆடவரின் பாட்டி வீட்டில் தொடங்கியது. பாட்டியை அவர் துப்பாக்கியால் சுட்டார்," என்று டெக்சஸ் பொதுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எரிக் எஸ்ட்ராடா கூறினார். உடனடியாக அந்த 66 வயது மாது உயிருக்கு ஆபத்தான நிலையில் சான் அண்டோனியோவில் உள்ள மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தமது பாட்டியைச் சுட்ட பின்னர், குண்டு துளைக்காத சட்டையை அணிந்துகொண்டு கைத்துப்பாக்கியுடன் காரில் ரமோஸ் தப்பிச் சென்றதாக திரு எஸ்ட்ராடா தெரிவித்தார். ரோப் தொடக்கப் பள்ளிக்கு வெளியே காரிலிருந்து இறங்கிய ரமோஸ், பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடியதாகவும் அதிகாரிகள் எவ் வளவோ முயன்றும் அவரைத் தடுக்க இயலவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
"பள்ளிக்குள் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். பின்னர் பல்வேறு வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாகச் சுட்டார்," என்று சிஎன்என் தொலைக்காட்சியிடம் திரு எஸ்ட்ராடா கூறினார்.
உயிரிழந்த குழந்தைகள் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் என்றும் அவர்கள் 7 வயதுக்கும் 10 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் மாநில ஆளுநர் கிரேக் அபட் கூறினார்.
ரோப் தொடக்கப் பள்ளியில் 500 மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளி ஆண்டு விடுமுறை தொடங்க இருந்த வேளையில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.