சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி விரிவுபடுத்தப்படுகிறது. போக்குவரத்தை மேலும் சீராக்கவும் போக்குவரத்து அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பிலும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியவை கூட்டாக இதனை அறிவித்தன. பெருமளவிலான இந்த மறுமேம்பாட்டு, விரிவாக்கத் திட்டத்திற்குச் சோதனைச்சாவடியின் அருகிலுள்ள ஒன்பது வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறியப்படுகிறது.
மேம்பாடு காணும் சோதனைச்சாவடி
கார்களையும் மோட்டார்சைக்கிள்களையும் உடனுக்குடன் அனுமதிப்பதற்கு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் தானியங்கித் தடங்கள் அதிகரிக்கப்படும். இதனால் பயண நேரம் நான்கு மடங்கு துரிதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடி, குடிநுழைவு மற்றும் தடைக்காப்பு வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள சாலைகளிலும் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பான அபாயகரச் சம்பவங்கள் ஏற்படுவதைக் குறைப்பதற்காக சோதனைச்சாவடியின் மையப் பகுதிகளிலிருந்து விலகியே பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் மாற்று வீடு
மார்சிலிங் கிரெசெண்ட்/லேன் வட்டாரத்தில் அமைந்துள்ள புளோக்குகள் 210 முதல் 218 வரை இந்த மறுமேம்பாட்டுத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். இந்த புளோக்குகளில் 732 விற்பனையான வீடுகள், 53 வாடகை வீடுகள், ஆறு வாடகைக் கடைகள் ஆகியவற்றுடன் வாடகை உணவகம் ஒன்றும் வாடகை ஒட்டுக்கடை ஒன்றும் அடங்கும். குடியிருப்பாளர்கள் 2028ன் இரண்டாம் காலாண்டுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும். அவர்களுக்கு 99 ஆண்டு குத்தகைக் காலத்துடன் புதிய மாற்று வீடுகள், உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் கட்டப்படும்.
மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 10 நிமிட நடை தொலைவில் அமையவுள்ள இந்தப் புதிய அடுக்குமாடிகளுக்கான கட்டுமானப் பணி அடுத்து மூன்றாம் காலாண்டில் தொடங்கும். வீடுகள் 2027ன் நான்காம் காலாண்டுக்குள் தயாராகிவிடும்.
ஈரறை வீடுகள் முதல் ஐந்தறை வீடுகள் வரை கிட்டத்தட்ட 1,103 புதிய வீடுகள் கட்டப்படும்.
வீட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீடு
வீட்டை வாங்கிய உரிமையாளர்களுக்கு, 'ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டம்' அதாவது 'செர்ஸ்' திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். தங்கள் வீடுகளின் சந்தை மதிப்பை ஒட்டி இந்த இழப்பீட்டுத் தொகை மதிப்பிடப்படும்.
வீடு மாறுவதால் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க $10,000 செலவுத்தொகை, புதிய வீட்டை வாங்குவதற்கான முத்திரை மற்றும் சட்ட ரீதியான செலவுகளை வீவக ஏற்றுக்கொள்ளுதல், புதிய வீட்டை வாங்கும் ஒற்றையர்களுக்கு $15,000 செர்ஸ் மானியத்தொகை, குடும்பங்களுக்கு $30,000 செர்ஸ் மானியத்தொகை முதலிய சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தங்களுக்கு விருப்பமான ஒரு வட்டாரத்தில் மறுவிற்பனை வீடு வாங்கவும் திட்டம் இடமளிக்கிறது.
வீட்டு, வர்த்தக வாடகைதாரர்கள்
மார்சிலிங் கிரெசெண்ட்டின் புளோக்குகள் 210, 211ல் வசிக்கும் வாடகைதாரர்களுக்கு மறுகுடியிருப்பு செலவுத்தொகையாக $2,500 வழங்கப்படும்.
அத்துடன் உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகள் (பிடிஓ) திட்டம் அல்லது மீதியிருக்கும் வீடுகளின் விற்பனை (எஸ்பிஎஃப்) திட்டத்தின்கீழ் வீடுகள் வாங்க முன்னுரிமை தரப்படும்.
பாதிக்கப்பட்ட வர்த்தக இடங்களின் வாடகைதாரர்கள் வேறு இடத்தில் வீவக வாடகைக் கடை அல்லது உணவகத்துக்கான ஏலக்குத்தகையை வெற்றிகரமாகச் சமர்ப்பித்திருந்தால் அவர்களுக்கு முதல் குத்தகைக் காலத் தவணையில் 10% வாடகைக் கழிவு கிடைக்கும்.
குடியிருப்பாளர்கள் கருத்து
புதிய அறிவிப்பு தொடர்பில் குடியிருப்பாளர்கள் சிலரின் கருத்தை அறிந்து வந்தது தமிழ் முரசு.
புளோக் 212ல் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் சியாமளா, தாம் இதே வீட்டில் புதுமணப்பெண்ணாக கணவரின் குடும்பத்துடன் வாழ்ந்ததாக கூறினார். இப்போது அந்த நினைவுகள் மனதைத் தைப்பதாக, சிறார் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றும் திருமதி சியாமளா கூறினார்.
ஆயினும், புளோக் 216ல் வாழ்ந்து வரும் திரு வின்ஸ்டன் தாமஸ், 79, தற்போதுள்ள தமது குடியிருப்பு மிகவும் பழையதாகிவிட்டதாகவும் புதிய குடியிருப்புக்காக தாம் காத்திருப்பதாகவும் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்னதாக மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி ஜோகூர் பாரு சென்று வந்த வசதி, இனிமேல் இருக்காது என்று கவலைப்பட்டார் புளோக் 218ல் வசிக்கும் போகா ஆறுமுகம், 62. ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீட்டுக்கு மாறவிருக்கும் திருவாட்டி போகா, தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு அருகில் புதிய வீடு இருக்கும் என்று ஆறுதல் கொள்கிறார்.
கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்,
யுகேஷ் கண்ணன்