சிங்கப்பூருக்கு ஏற்புடையதாக அதன் ஜனநாயக அமைப்புமுறை உள்ளதாகவும் அந்த அமைப்புமுறையால் சட்ட ஒழுங்கு, வளர்ச்சி, செயல்திறன்மிக்க ஆளுமை போன்ற விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
தோக்கியோவில் ஆசியாவின் எதிர்காலம் குறித்து நடைபெற்று வரும் 27வது அனைத்துலக மாநாட்டில் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றின்போது 'நிக்கே ஏஷியா'வின் தலைமை ஆசிரியர் ஷிகேசபுரோ ஒக்குமுரா கேட்ட கேள்விக்குப் பிரதமர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
சுதந்திரம் பெற்றதை அடுத்து பல்வேறு அம்சங்களில் சிங்கப்பூர் முன்னேற்றம் அடைந்துள்ளதை திரு ஒக்குமுரா பாராட்டியபோதும் மக்கள் செயல் கட்சியின் ஆதிக்கம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். ஜனநாயக மாநாட்டுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்துகொள்ளுமாறு சிங்கப்பூருக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்காததையும் அவர் சுட்டினார்.
"சிங்கப்பூருக்கு எது பலன் அளிக்குமோ அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். எங்கள் சட்ட ஒழுங்கு, எங்கள் வளர்ச்சி, செயல்திறன்மிக்க அரசாங்கம் நன்று என்கிறீர்கள். உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
"இருப்பினும் எங்களின் அரசியல் இயங்கும் விதத்தோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று சிந்தித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து, அவர்களின் ஆர்வம் எதில் உள்ளது என்பதை உணர்ந்து, நாட்டின் நலனையும் தங்களின் எதிர்கால நலனையும் கவனித்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள்.
"அடுத்தடுத்த தேர்தல்களில் எங்களால் இதை நிறைவேற்ற முடிவதால் மக்கள் செயல் கட்சிக்கு மக்களின் பலத்த ஆதரவு கிடைக்கிறது. அதனால் மக்களுக்குச் சேவையாற்றவும் அவர்களுடன் இணைந்து மேலும் சிறப்பாக ஆட்சி செய்யவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இது முடிந்தவரை நீண்டகாலத்திற்குத் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்," என்றார்.
மக்களுக்குச் சேவை புரிந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் இயங்கினாலும் மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்களில் தேவை ஏற்படும்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை சிங்கப்பூரின் அரசியல் தலைவர்கள் அறிந்திருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.

