முரளி சண்முகத்தை முகத்துக்கு நேராக நின்று ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டபோது முரளியின் மனைவியும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
கெடா மாநிலத்தின் ஜாலான் கம்போங் பாரு பகுதியில் உணவு சாப்பிட்டுவிட்டு கடைக்கு வெளியே முரளியின் மனைவியும் மகனும் நின்றுகொண்டிருந்த சமயம், நேற்று முன்தினம் சுமார் பகல் 12.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக 'த ஸ்டார்' செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தமது காரின் கதவை 36 வயது முரளி திறக்கச் சென்றபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நால்வர் வந்ததாகவும் அந்த நால்வரில் ஒருவர் துப்பாக்கியால் முரளியின் தலையைக் குறைந்தது எட்டு குண்டுகளைக் கொண்டு துளைத்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே முரளி மாண்டுவிட்டார் என்று உறுதிசெய்யப்பட்டது.
தாக்குதல் நடத்திய நால்வரும் முகத்தை மறைத்தவாறு கையுறைகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முரளியின் மனைவி, மகன், நண்பர் ஆகிய மூவரும் காயங்களின்றி உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட முரளி, குண்டர் கும்பல் தலைவன் என்று நம்பப்படுவதாக கெடா காவல்துறைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டக் குற்றச்செயல்கள், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முரளி, தேடப்பட்டு வந்த ஒருவர் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புக் குற்றச்செயல்கள் சட்டத்தின்கீழ் முரளி மீது வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.
முரளி அடிக்கடி வந்து போகும் இடம் அந்த காப்பிக் கடை என்றும் வாரந்தோறும் அவர் தம் குடும்பத்தாருடன் அங்கு உணவு சாப்பிட வருவார் என்றும் சம்பவ இடத்தில் இருந்த சாட்சி ஒருவர் கூறினார்.
இது குண்டர் கும்பலில் உள்ளவர்கள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

