பிரதமர் லீ: இருப்பை பலப்படுத்த, கொள்முதல் வழிகளைப் பலமுனைப்படுத்த முயற்சி
உக்ரேன் போர், அதிக பணவீக்கம் காரணமாக உணவு விநியோகக் கட்டமைப்பில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன.
இதனால் சிங்கப்பூரும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது வருத்தமளிக்கிறது என்றாலும் வியப்பான ஒன்று அல்ல என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
போதிய அளவுக்கு உணவுப்பொருள்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த பல ஆண்டு காலமாகவே சிங்கப்பூர் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இருப்புகளை அதிகமாக்குவதும் உணவுப்பொருள்களைப் பெறும் வழிகளைப் பலமுனைப்படுத்துவதும் அதில் உள்ளடங்கும்.
இவற்றின் மூலம் சிங்கப்பூரர்கள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை என்று திரு லீ விளக்கினார்.
"உணவுப்பொருள்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற முறையில், நாம் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இது வருத்தமளிக்கிறது," என்று திரு லீ சிங்கப்பூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
பிரதமர் தோக்கியோவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டு இருந்தார். இறுதி நாளன்று அவர் சிங்கப்பூர் ஊடகத்திடம் பேசினார்.
திரு லீ எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை. இருந்தாலும் இந்த வார தொடக்கத்தில் மலேசியா ஓர் அறிவிப்பை விடுத்தது.
உற்பத்தியும் விலையும் நிலைப்படும்வரை ஜூன் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் 3.6 மில்லியன் புதிய கோழி இறைச்சி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்போவதாக மலேசியா அறிவித்தது.
இந்தியா உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கும் நோக்கத்தில் சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
கொவிட்-19 தலைகாட்டிய போது முகக்கவசங்களும் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்களும் போதிய அளவுக்கு கிடைக்காமல் போனதை திரு லீ சுட்டிக்காட்டினார். உலக வர்த்தக விதிகள் மீறப்படும் பட்சத்தில் உலக வர்த்தக நிறுவனத்தை நாடி அதற்குத் தீர்வு காணலாமா என்பது பற்றி கருத்து கூறிய திரு லீ, அது நீண்டநெடிய நடைமுறை என்று குறிப்பிட்டார்.
இப்போதைய சூழ்நிலையில், உணவு விநியோகத்தைப் பாதுகாப்பதே அவசர தேவை என்றார் அவர். "இதற்கான விடை இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. கடந்த பல ஆண்டுகளாக நாம் என்ன செய்து வந்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
"சிங்கப்பூர் பல ஆண்டுகளாகவே இருப்புகளை அதிகப்படுத்தி வந்திருக்கிறது. மீள்திறனை மேம்படுத்தி உள்ளது.
"உணவுப்பொருள்கள் கொள்முதல் செய்வதைப் பலமுனைப்படுத்தி இருக்கிறது," என்று திரு லீ குறிப்பிட்டார்.
"ஆகையால், உணவுப்பொருள் ஓரிடத்தில் இருந்து வருவது தடைபட்டால், அதாவது ஓர் இடத்தில் இருந்து கோழியை வாங்க முடியவில்லை என்றால் இதர நாட்டில் இருந்து நாம் அதை வாங்க முடியும்.
"இப்போது கோழி தட்டுப்பாட்டுப் பிரச்சினை. அடுத்ததாக வேறு ஏதாவது தலைதூக்கலாம். எதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் போதிய உணவுப்பொருள் கிடைப்பதை உறுதிப்படுத்த கொள்முதல் வழிகளைப் பலமுனைப்படுத்துகிறது. இதுவே முக்கிய உத்தியாக இருக்கிறது.
தனக்கு தேவையான உணவுப்பொருள்களில் 90 விழுக்காட்டை சிங்கப்பூர் இறக்குமதி செய்கிறது.
இதனிடையே, சிங்கப்பூரில் போதிய அளவுக்கு கோழி இருப்பதாகவும் ஆகையால், பயந்துகொண்டு மக்கள் அளவுக்கு அதிகமாக அதை வாங்க வேண்டாம் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

