வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மொத்தம் 4,583 பிடிஓ வீடுகளை நேற்று விற்பனைக்கு விட்டது. அந்த வீடுகளில் புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் ஆகிய நகர்களில் கட்டப்படும் முதன்மை வட்டார, பொது வீடமைப்பு மாதிரி வீடுகளும் உள்ளடங்கும்.
இந்தப் புதிய மாதிரி திட்ட வீடுகளைப் பின்னர் விற்கும்போது மானியத்தில் 6%ஐ கழகத்திடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டி இருக்கும். புதிதாக விற்பனைக்கு விடப்பட்ட வீடுகள் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் கட்டப்படும் ஐந்து வீட்டுத் திட்டங்களில் இடம்பெற்று இருக்கும்.
இந்த ஆண்டில் இதையும் சேர்த்து இரண்டாவது முறையாக வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டு உள்ளன. புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் ஆகியவற்றில் பிரதான வட்டார பொது வீடமைப்பு மாதிரி திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் கடுமையான நிபந்தனைகள் இருக்கும்.
முதிர்ச்சியடைந்த பேட்டையான புக்கிட் மேராவில் அமையும் புக்கிட் மேரா ரிட்ஜ் திட்டத்தில் ஆகிய ஐந்து புளோக்குகளில் 1,669 மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். அந்த புளோக்குகள் 29 முதல் 48 மாடிகள் வரை உயரம் இருக்கும்.
புக்கிட் மேரா புதிய வீடுகளை வாங்க விரும்புவோர் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும். இந்த வீட்டுத் திட்டம் 2028 முதல் காலாண்டில் கட்டி முடிக்கப்படும்.
குவீன்ஸ்டவுனில் நான்கு புளோக்குகளில் மொத்தம் 867 மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும். அவற்றில் இரண்டு புளோக்குகள் 40 மாடி உயரத்தில் இருக்கும். இதர இரு புளோக்குகள் முறையே எட்டு மாடி, 31 மாடி உயரத்தில் கட்டப்படும்.
இந்த வீடுகள் போன விஸ்தா எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அமையும். இந்த வீடுகளில் மூவறை வீட்டின் விலை $369,000 முதல் $481,000 வரை இருக்கும்.
நாலறை வீட்டின் விலை $511,000 முதல் $691,000 வரை இருக்கும். இந்த வீடுகளுக்காக ஐந்தாண்டு காலம் காத்திருக்க வேண்டும்.
புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுனில் கட்டப்படும் புதிய வீடமைப்பு மாதிரி திட்ட வீடுகளை வாங்குவோர், தங்கள் வீட்டை முதல் முறையாக வெளிச் சந்தையில் விற்கும்போது மறுவிற்பனை விலையில் அல்லது வீட்டின் மதிப்பில் 6 விழுக்காட்டு தொகையை வீவகவிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமின்றி அந்த வீட்டை வாங்குவோர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வீட்டில் குடியிருந்த பிறகுதான் அதை வெளிச் சந்தையில் விற்கலாம்.
அதாவது இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் வீடுகளை வாங்குவோர் 2038ஆம் ஆண்டில்தான் தங்கள் வீடுகளை விற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான பிடிஓ வீடுகளில் ஐந்தாண்டுகள் குடியிருந்தால் போதும். அவற்றைப் வெளிச் சந்தையில் விற்க முடியும்.
கழகத்திற்கு மானியம் எதையும் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.
புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன் இரண்டு இடங்களிலும் கட்டப்படும் புதிய வீடுகளில் 20 விழுக்காடு வரைப்பட்ட வீடுகள் வீவகவின் திருமணமான பிள்ளை முன்னுரிமைத் திட்டத்தின்கீழ் முதன்முதலாக மானியம் பெறும் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படும். 2 விழுக்காடு வீடுகள் இரண்டாவது முறை மானியம் பெறும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும்.
தோ பாயோவில் கிம் கியாட் ஹைட்ஸ் முதிர்ந்த குடியிருப்பு பேட்டையில் பிடிஓ திட்ட வீடுகள் கட்டப்படும்.
மொத்தம் 385 ஈரறை நீக்குப்போக்கு வீடுகளும் மூவறை, நான்கறை வீடுகளும் உருவாகும்.
அவை இரண்டு புளோக்குகளில் அமைந்து இருக்கும். அந்த புளோக்குகள் 27 முதல் 36 மாடிகளைக் கொண்டு இருக்கும். இரண்டு புளோக்குகளிலும் சில வாடகை வீடுகளும் இருக்கும். இந்த வீடுகளை வாங்க 55 மாதம் காத்திருக்க வேண்டும்.
ஜூரோங் வெஸ்ட்டில் ஏழு புளோக்குகளில் மொத்தம் 1,016 ஈரறை நீக்குப்போக்கு வீடுகளும் மூவறை, நான்கறை, ஐந்தறை வீடுகளும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.