சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று இந்தியா முடிவு செய்து இருக்கிறது. இருந்தாலும்கூட சிங்கப்பூர் பயனீட்டாளர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
இந்தியா உலகின் ஆகப் பெரிய நான்காவது சர்க்கரை உற்பத்தி நாடு. பிரேசிலுக்கு அடுத்தபடியாக அது சர்க்கரை ஏற்றுமதியில் 2வது இடத்தைப் பெற்று இருக்கிறது என்று அந்தத் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஆனால் இந்தியாவில் இருந்து கொஞ்ச அளவு சர்க்கரையை சிங்கப்பூர் இறக்குமதி செய்கிறது. சிங்கப்பூரில் சர்க்கரையை அதிக அளவு இறக்குமதி செய்யும் 'செங் இயூ ஹெங்' நிறுவனம், சர்க்கரையையும் தயாரிக்கிறது.
இந்த நிறுவனம் இறக்குமதி செய்யும் சர்க்கரையில் இந்தியாவில் இருந்து வரும் சர்க்கரையின் அளவு 5%க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து, மலேசியா நாடுகளில் இருந்துதான் சிங்கப்பூர் அதிகமாக சர்க்கரையை இறக்குமதி செய்கிறது என்று 'ஹியாங் லி டிரேடர்ஸ்' நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
உள்ளூர் சந்தையில் புழங்கும் இந்திய சர்க்கரை அளவு மிகவும் குறைவு. ஆகையால், இந்திய அரசின் முடிவால் நாம் கவலைப்படத் தேவையில்லை என்று அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்தியா, பொதுவாக ஆண்டு முடிவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு வரம்பு விதிக்கும் என்றார் அவர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தியாவிடம் இன்னமும் சர்க்கரை உபரியாக இருக்கிறது. ஆகையால், நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
உள்ளூர் சந்தை விலைகள் நிலைப்பட்டதும் இந்தியா பழையபடி சர்க்கரையை அதிகம் ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிடும் என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார்.
இதனிடையே, ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் சர்க்கரையை இறக்குமதி செய்வதாக சிங்கப்பூர் உணவு அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

