ஜி7 அமைப்பில் இடம்பெற்று இருக்கும் பணக்கார நாடுகள் 2035வது ஆண்டு வாக்கில் மின்சாரத் துறையில் இயற்கை எரி பொருள் புழக்கத்தை அறவே நிறுத்திவிட இலக்கு நிர்ணயித்துள்ளன.
அந்த நாடுகள் பெர்லின் நகரில் மூன்று நாள் பேச்சுவார்த்தை நடத்தின. அதன் முடிவில் பரந்த அளவிலான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முடிவு வாக்கில் இயற்கை எரிபொருள் மூலம் கிடைக்கும் எரிசக்திக்கான அரசு நிதியை நிறுத்தப்போவதாக அந்த நாடுகளின் பருவநிலை, எரிசக்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உறுதி கூறினர்.
நிலக்கரி, எரிவாயு பயனீடு மூலம் ஏற்படக்கூடிய கரிமக் கழிவுகளுக்கு முடிவுகட்டுவதில் கவனம் திரும்பி இருப்பதாக 'எம்பர்' என்ற பிரிட்டனின் எரிசக்தித் துறை அறிவுஜீவி அமைப்பின் உலக செயல்திட்டத் துறைத் தலைவர் டேவ் ஜோன்ஸ் டுவிட்டரில் தெரிவித்தார்.
மின்சக்தித் துறையில் 2035ஆம் ஆண்டில் கரிமக் கழிவுகள் அறவே இல்லாதபடி செய்வது என்ற இலக்கு உண்மையிலேயே ஒரு முன்னேற்றம் என்று ரோம் நகரில் 'ஈகோ' என்ற சுற்றுச்சூழல் அறிவுஜீவி அமைப்பின் இயக்குநர் லுகா கூறினார்.
இந்த இலக்கு நிறைவேற வேண்டுமானால் நாடுகள் நிலக்கரி பயனீட்டை 2030ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக முற்றிலும் குறைத்துவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஜெர்மனியில் ஜி7 தலைவர்கள் வரும் ஜூன் மாதம் சந்திக்க இருக்கிறார்கள். அப்போது அவர்கள் இந்த இலக்கை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாலைகளில் கரிமக் கழிவு வெளியாவதை 2030ஆம் ஆண்டு வாக்கில் துடைத்தொழிக்கவும் அமைச்சர்கள் உறுதி கூறினர்.
ஜி7 அமைப்பில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உக்ரேன் போர் காரணமாகவும் கொவிட்-19க்குப் பிறகுப் பொருளியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்குவதன் விளைவாகவும் உலகளவில் எரிசக்தி விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத எரிசக்தியைச் சாதிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

