வானில் பறந்துகொண்டிருந்த வேளையில் 22 பேருடன் மாயமான சிறு நேப்பாள விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்தப் பகுதியில் சிதறிக் கிடந்த 20 பேரிடன் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேப்பாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த டுவின் ஒட்டர் விமானம் நேப்பாளத்தின் டாரா ஏர் என்னும் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு நேப்பாள நகரான பொக்காராவிலிருந்து ஜோம்சம் நோக்கி பறக்கத் தொடங்கிய விமானம் சிறிது நேரத்திலேயே காணாமல் போனது. அதன் தொடர்பு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தேடி மீட்கும் பணி உடனடியாகத் தொடங்கியது. மலைகள் சூழ்ந்த வட்டாரத்தில் ராணுவ ஹெலிகாப்டர்களும் தனியார் ஹெலிகாப்டர்களும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தீவிரமாகத் தேடின.
இருட்டத் தொடங்கியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டு நேற்றுக் காலை மீண்டும் தொடங்கியது. அப்போது மலைகளின் இடையே விமானத்தின் சிதைவுகளை மீட்புப் படையினர் கண்டனர்.
அந்தப் படங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக ராணுவம் பகிர்ந்துகொண்டது. விமானத்தின் இறக்கை, 9N-AET என்னும் பதிவெண் தாங்கிய பாகம் உட்பட சிதைந்த பாகங்களை அந்தப் படங்கள் காட்டின. விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள் உட்பட 22 பேர் பயணம் செய்ததில் நேற்று இரவு வரை 20 உடல்கள் மீட்கப்பட்டன.வானிலை மோசமாக இருந்தபோதிலும் தேடுதல் பணி தொடர்வதாகவும் நேப்பாள விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் டியோ சந்திர லால் கார்ன் கூறினார்.
நேப்பாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தில் உள்ள தசாங் கிராமப் பகுதியில் சனோஸ்வேர் மலை வட்டாரத்தில் 4,420 மீட்டர் உயரத்தில் விமானம் விபத்தில் சிக்கியதாக ஆணையம் தெரிவித்துள்ளது. விபத்து எவ்வாறு நடந்தது என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

