உணவுப்பொருள்களின் விலையும் வாழ்க்கைச் செலவினங்களும் உயர்ந்துவரும் நிலையில், மலேசியாவில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
அடுத்த ஆண்டிற்குமுன் மலேசியாவில் தேர்தல் நடத்த வேண்டியதில்லை. ஆனாலும், அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் அம்னோ கட்சிக்கு நல்லாதரவு கிட்டியதை அடுத்து, அதைச் சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் பொதுத் தேர்தலையும் முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயிலை அம்னோ நெருக்குவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பொதுத் தேர்தல் குறித்து அறிவிக்க சரியான நேரத்திற்குக் காத்திருப்பேன் என்று நிக்கேய் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது திரு இஸ்மாயில் கூறினார்.
"விலைவாசியும் பணவீக்கமும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் இருக்கிறோம். இது பொதுத் தேர்தல் நடத்துவதற்குச் சரியான நேரம் என்று நினைக்கிறீர்களா?" என்று பிரதமர் இஸ்மாயில் கேட்டதாக நிக்கேய் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் உணவுப்பொருள்களின் விலை 4.1% கூடியதை அடுத்து, இவ்வாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2.3 விழுக்காட்டில் இருந்து 3.2 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று மலேசிய மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
முன்னதாக, பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி அண்மையில் உயர்த்தி அறிவித்தது.
அத்துடன், விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்த ஆர்வம்
இந்த நிலையில், பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்த தமது அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக பிரதமர் இஸ்மாயில் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் மலேசியாவில் அப்போதைய அம்னோ அரசு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. ஆயினும், அந்த 6% வரியே விலைவாசி உயர்விற்குக் காரணம் எனப் பொதுமக்கள் சாடினர். இதனையடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையிலான அரசாங்கம் ஜிஎஸ்டியை ரத்து செய்தது.
ஜிஎஸ்டிக்கு மக்களிடத்தில் ஆதரவு இல்லை என்பதை அரசாங்கம் அறிந்திருந்தாலும் அவ்வரி ரத்து செய்யப்பட்ட பிறகு அரசாங்கத்தின் ஆண்டு வருவாயில் 20 பில்லியன் ரிங்கிட் (S$6.26 பில்லியன்) இழப்பு ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்குச் சுமையாக விளங்காத வகையில் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை நிர்ணயிக்க அரசாங்கம் இலக்கு கொள்ளும் என்றும் அதே நேரத்தில் வரி வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதால் அது மிகக் குறைவாகவும் இராது என்றும் பிரதமர் இஸ்மாயில் சொன்னார்.
மலேசியா இவ்வாண்டில் மட்டும் எரிபொருள் மானியமாக 28 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் 11 பில்லியன் ரிங்கிட் எரிபொருள் மானியமாக வழங்கப்பட்டது.

