மோனலிசா
உயர்நிலைப்பள்ளி காலத்திலிருந்தே அறிவியல் ஆர்வமும் தொண்டூழிய முனைப்பும் கொண்டிருக்கும் பொதுச் சுகாதார மருத்துவர் மா.பிரெமிக்கா, 26, வருங்காலத்தில் சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதையும் பொதுச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை இளையர்களிடம் கொண்டுசெல்வதையும் தமது லட்சியமாக கொண்டுள்ளார்.
கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது இவருக்குக் கிடைத்த அனுபவங்கள், பொதுச் சுகாதாரம் மீதுள்ள ஆர்வத்தை அதிகப்படுத்தியதோடு உடல் ரீதியான சிகிச்சையுடன் நோயாளிகளின் மனப்போக்கை புரிந்துகொண்டு அதற்கு தக்கவாறு சிகிச்சை அளிக்கவும் கற்றுக்கொடுத்ததாகக் கூறினார்.
இந்த ஆண்டின் லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற இவர், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதாரத் துறையில் ஓராண்டுகால முதுநிலைப் பட்டக்கல்வியை மேற்கொள்ள இருக்கிறார்.
“கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலகட்டத்தில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்தபோது, சிங்கப்பூருக்கு தேவையான கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதும் பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவைகளைக் கணிப்பதும் தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாதவர்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் சவால்களாக இருந்தன,” என்று பிரெமிக்கா கூறினார்.
சிங்கப்பூரின் முதல் 50 கொவிட்-19 நோயாளிகளில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த இவர், மனவுளைச்சலுக்கு ஆளான நோயாளிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான சிகிச்சை அளித்தது மிகுந்த சவாலாக இருந்ததாகக் கூறினார். கொவிட்-19 திரிபுகளான டெல்டா, ஓமிக்ரான் ஆகியவற்றுக்கு எதிரான உரிய சிகிச்சைமுறை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு நோயாளிகளை அணுகுவது கடினமாக இருந்ததாகவும் இவர் சொன்னார்.
“கடலில் வேலை செய்யும் ஏறத்தாழ 36,000 ஊழியர்களுக்கு ‘சீ வேக்ஸ்’ திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளைக் கொண்டுசெல்லும் திட்டக்குழுவில் பல பங்காளிகளுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம், பரந்த கண்ணோட்டத்தில் சிகிச்சை அளிக்கக் கற்றுக்கொள்ள உதவியது.
“மேலும், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் வெகுநாள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழ் ஊழியர்களிடம் தமிழில் பேசி சிகிச்சை அளித்தது மறக்கமுடியாத அனுபவம். ஒரு மருத்துவராக நோயாளிகளின் நம்பிக்கையை பெறுவதன் அவசியத்தை அப்போது நான் உணர்ந்தேன்,” என்று பிரெமிக்கா நினைவுகூர்ந்தார்.
வீட்டிலிருந்து குணமடையும் திட்டத்தின்கீழ், 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இணையம்வழி இவர் மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
தமிழ்மொழி மீது அதீத ஆர்வம் கொண்டுள்ள இவர், மருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்கு முன்பு தமிழ் முரசில் மாணவ செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார். தேசிய நூலக வாரியத்தின் இளம் எழுத்தாளர்கள் வட்டத்தின் செயலவைக்குழு உறுப்பினராகவும் கல்வி அமைச்சு தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.
சிங்கப்பூர் சுகாதாரத் துறையின் பங்குதாரர்களான அரசாங்கம், சுகாதார நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரையும் ஒருங்கிணைக்கும் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது தனது கனவு என்று சொன்ன இவர், இதன்மூலம் சிங்கப்பூரில் உள்ள நாட்பட்ட நோய்களின் எண்ணிக்கையையும் புது நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்க முடியும் என்று கூறினார்.
மருத்துவரான டாக்டர் ஹைரில் ரிஸால் அப்துல்லாவும் சுகாதார அமைச்சில் சுகாதாரப் பராமரிப்பு நிதிக் குழுவின் துணை இயக்குநரான திரு மெத்தியூ லீயும் இந்த ஆண்டின் லீ குவான் இயூ உபகாரச் சம்பளத்தை பெற்றுள்ளனர்.
நவீன சிங்கப்பூரின் சிற்பியான அமரர் லீ குவான் இயூவின் பங்களிப்புகளைப் போற்றும் விதமாக, தலைசிறந்த சிங்கப்பூரர்கள் தங்களின் மேற்படிப்பை மேற்கொள்ள 1991ஆம் ஆண்டு தஞ்சோங் பகார் குடிமக்கள் ஆலோசனை மன்றம் இந்த உபகாரச் சம்பளத்தை நிறுவியது.