சிக்கலான பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில், ஐந்து நாட்டு தற்காப்பு உடன்பாட்டுக் கூட்டமைப்பு (எஃப்பிடிஏ) நவீன சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்ய தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதாக கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகள் கூறியுள்ளன.
தென்கிழக்காசியாவில் ஆயுதமேந்திய பூசலுக்கு மத்தியில் 1971ல் அமைக்கப்பட்ட எஃப்பிடிஏவில் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ ஆயுதமேந்திய தாக்குதல் இடம்பெற்றால், இந்தக் கூட்டமைப்பின்கீழ் உறுப்பு நாடுகள் ஒன்று மற்றொன்றுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு எஃப்பிடிஏ அதன் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்புக்கு (நேட்டோ) அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழமைவாய்ந்த தற்காப்புக் கூட்டமைப்பாக எஃப்பிடிஏ திகழ்கிறது.
ஷங்ரிலா மாநாட்டிற்கு மத்தியில், எஃப்பிடிஏ உறுப்பு நாடுகளின் பிரமுகர்களை சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று சந்தித்துப் பேசினார்.
"எஃப்பிடிஏ நவீன சூழலுக்கு பொருத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அறிகிறோம். அவ்வாறு செய்ய நாங்கள் கடப்பாடு கொண்டிருக்கிறோம்," என்று செய்தியாளர்களிடம் கூறினார் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ்.

