ஷங்ரிலா மாநாட்டில் உக்ரேனிய அதிபர் வலியுறுத்து
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர், உக்ரேனை மட்டும் அல்லாமல் அனைத்துலகச் சட்டத்தின் எதிர்காலத்தையும் பாதித்துள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் பெயர் குறிப்பிடப்படாத இடத்திலிருந்து பேசிய அவர், ஆசியாவின் முதன்மை பாதுகாப்பு உச்சநிலை மாநாடான ஷங்ரிலா கலந்துரையாடலில் காணொளி வழியாக கலந்துகொண்டு நேற்று பிரமுகர்களிடம் உரையாற்றினார்.
மேற்கத்திய, ஆசிய நாடுகளிடமிருந்து உக்ரேனுக்கு கிடைத்துள்ள ஆதரவைப் பற்றிப் பேசிய அவர், உதவி வழங்குவதை நாடுகள் நிறுத்திவிடாமல் இருப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.
"உங்களது ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனாலும், இந்த ஆதரவு உக்ரேனுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்கூட," என்று அவர் சொன்னார்.
கருங்கடல், அஸோவ் கடலில் உள்ள துறைமுகங்களை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ளதால், உக்ரேனால் உலக நாடுகளுக்கு உணவு ஏற்றுமதிகளை செய்ய முடியவில்லை என்று திரு ஸெலென்ஸ்கி சொன்னார். இது, உக்ரேனுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அவர் சுட்டினார்.
"எங்களால் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றால், பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான உணவு நெருக்கடியும் பஞ்சமும் எற்படும்," என அவர் எச்சரித்தார்.
நாற்பது நாடுகளைச் சேர்ந்த 575 பிரமுகர்களிடம் பேசிய திரு ஸெலென்ஸ்கி, ரஷ்ய எல்லைக்குள் நுழைய தம் ராணுவத்துக்கு எண்ணம் எதுவுமில்லை என்றார்.
"எங்களது மண்ணில் போர் தொடுக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உக்ரேனில் மக்கள் மடிகின்றனர். ரஷ்ய மண்ணுக்குச் செல்ல நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
அனைத்துலகச் சட்டத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்வதாக ரஷ்யாவை விமர்சித்த திரு ஸெலென்ஸ்கி, சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூ கூறியிருந்த வார்த்தைகளையும் தமது உரையில் மேற்கோள் காட்டினார்.
"நீங்கள் நன்கறிந்த ஒருவர் கூறியிருந்த வார்த்தைகளை உங்களுக்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். அனைத்துலகச் சட்டம் இல்லையெனில், பெரிய மீன் சிறிய மீனை விழுங்கிவிடும். சிறிய மீன், இறால்களை விழுங்கிவிடும். நாம் இல்லாமல் போயிருப்போம்.
"இவை, திரு லீ குவான் இயூவின் அனுபவ அறிவுடைய சொற்களாகும். பல விஷயங்களுக்கான தெளிவான காரணங்களை நன்கு அறிந்த தலைவரான அவர், எதற்கு என்ன மதிப்பு உள்ளது என்பதை நன்றாக அறிந்திருந்தார்," என்றார் திரு ஸெலென்ஸ்கி.

