ஜோகூர் பாருவுக்கும் உட்லண்ட்சுக்கும் இடையே கேடிஎம் ரயில் சேவை ஜூன் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் காரணமாக 2020 மார்ச் 24ஆம் தேதியிலிருந்து இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.
சென்ற மாதம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பொதுப் பேருந்து, டாக்சி சேவைகள் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, கேடிஎம் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் 19 முதல் ஜூலை 18 வரையிலான காலகட்டத்தில் பயணம் மேற்கொள்வதற்கான ரயில் பயணச்சீட்டு விற்பனை நாளை அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும்.
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே தினந்தோறும் 31 ரயில் சேவைகள் வழங்கப்படும் என திரு வீ நேற்று தெரிவித்தார். ஜே.பி. சென்ட்ரலில் இருந்து உட்லண்ட்சுக்கு 18 ரயில் சேவைகளும் உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாருவுக்கு 13 ரயில் சேவைகளும் வழங்கப்படும்.
ஜோகூர் பாருவிலிருந்து பயணம் செய்பவர்கள் 5 ரிங்கிட் ($1.56) செலுத்த வேண்டும். உட்லண்ட்சிலிருந்து ஜோகூர் பாரு செல்பவர்கள் $5 செலுத்த வேண்டும்.