இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜயினி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனில் ஃபிரோஜியா, தான் 15 கிலோ உடல் எடையைக் குறைந்து விட்டதாகவும் உறுதி கூறியதைப் போல் மத்திய அமைச்சர் 15,000 கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய சாலை, போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த பிப்ரவரி மாதம் உஜ்ஜயினி நகரில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் உஜ்ஜயினி தொகுதி பாஜக எம்பி ஃபிரோஜியா முன்னிலையில் கட்காரி பேசினார்.
"முதன்முதலாக எம்பி ஆகி இருக்கும் ஃபிரோஜியா 135 கிலோ வுக்கும் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்.
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'உடலுறுதி இந்தியா' என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். அதை கருத்தில் கொண்டு ஃபிரோஜியா தன் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
"அப்படி குறைக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் அவரின் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி கொடுக்கப்படும்," என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கட்காரி சவால் விடுத்தார்.
"அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டேன். நாள்தோறும் காலையில் 5 மணிக்கு எழுந்தேன். நடை, ஓட்டம் என்று பயிற்சி செய்தேன். யோகா செய்தேன். மன நலனைப் பேணினேன்.
"உணவைக் குறைத்து உடல் நலனுக்கு ஏற்ற உணவை சாப்பிட தொடங்கினேன். உறுதியுடன் செயல்பட்டேன். நான்கு மாதங்களில் 15 கிலோ எடையைக் குறைத்துவிட்டேன்.
"ஆகையால் அமைச்சர் உறுதி கூறியதைப் போல் என் தொகுதிக்கு ரூபாய் 15,000 கோடி தொகையை ஒதுக்கவேண்டும்.
"இதோடு நிற்கப்போவதில்லை. தொடர்ந்து உடல் எடையைக் குறைத்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் தொகுதியை மேம்படுத்தப்போகிறேன்.
"பிரதமரின் உடலுறுதித் திட்டத்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை," என்று எம்பி ஃபிரோஜியா தெரிவித்தார்.

