நேஷனல் ஹெரால்டு நாளி
தழின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துக்களை சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்தார்.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறையில் முன்னிலை யாக வேண்டும் என உத்தர
விடப்பட்டது. அழைப்பாணை அனுப்பப்பட்டதை அடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ராகுல் காந்தி அவரது சகோ
தரியும் காங்கிரஸ் பொதுச்
செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ராவுடன் நேற்று சென்றார். அதற்கு முன்னதாக ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் தலைநகர் புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்துடன் அமலாக்கத்துறை அலுவலகம் முன் ராகுல் காந்தி சிறிது தூரம் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து சத்தியாகிரக பாதயாத்திரை மேற்கொண்டார். ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

