சிங்கப்பூரில் தேசிய தின காலகட்டத்தின்போது நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் இப்போது இருப்பதைவிட இன்னும் தாராள மாக தேசிய கொடியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் கிட்ட இருக்கின்றன.
தேசிய சின்னங்களின் பயனீடு பற்றிய சட்டங்களைத் தளர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்பில் கருத்துகளைத் தெரியப்படுத்தும்படி கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூர் சின்னம், கொடி மற்றும் தேசிய கீதம் (Safna) சட்டத்திற்குப் பதிலாக தேசிய சின்னங்கள் சட்டம் என்ற புதிய ஒரு சட்டத்தையும் அதன் தொடர்பான விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்த தான் விரும்புவதாக இந்த அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதன் விளைவாக தேசிய கொடிகளை மக்கள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் வரை அவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிட்டும்.
அதேவேளையில், தேசிய சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அதற்கான அதிகபட்சத் தண்டனை 30 மடங்கு அதிகரிக்கப்படும்.
இப்போது $1,000 ஆக இருக்கும் அபராதம் $30,000 ஆகக்கூடும். தேசிய சின்னங்கள் மரியாதையற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது இதன் நோக்கம்.
வேண்டுமென்றே தேசிய சின்னங்களை யாராவது தவறாகப் பயன்படுத்தி இருந்தால் அந்தக் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத்தண்டனையும் விதிக்க முடியும்.
தேசிய சின்னங்கள் தொடர்பில் மக்கள் மேலும் அதிக உடைமை உணர்வைப் பெற இந்தப் புதிய விதிமுறைகள் உதவும் என்று அமைச்சு நம்புகிறது.
பொதுமக்களுடன் கூடிய கலந்துரையாடல்கள் ஜூலை 8ஆம் தேதி மாலை 6 மணி வரை இடம்பெறும்.
தேசிய சின்னங்கள் தொடர்பான விதிமுறைகள் இப்போது மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.
அவற்றின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அவற்றின் விளைவாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா ஒன்று தாக்கலாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் கருத்துகளை https://www.reach.gov.sg/Participate/Public-Consultation/Ministry-of-Culture-Community-and-Youth/public-consultation-paper-on-the-national-symbols-regulations என்ற இணையத் தளத்தில் தெரிவிக்கலாம்.

