அமெரிக்கா-சீனா போட்டி, உக்ரேன் போர் குறித்து அமைச்சர் விவியன் பேச்சு
வல்லரசு நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி, ஆசியா முழுவதும் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டாக்டர் விவியன் இந்தியா சென்றுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் விவியன், "கடந்த சில மாதங்களாக உலகம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்கா-சீனா இடையிலான போட்டி நம் எல்லோர்மீதும் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இவை தடுக்கப்படாவிடில், பல பத்தாண்டுகளாக நமது வளர்ச்சி, மேம்பாடு, வளமை ஆகியவற்றுக்கு அடிப்படையாகத் திகழும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமையலாம்," என்றார்.
டாக்டர் விவியனும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
கொவிட்-19 பரவலின்போது இந்தியா வழங்கிய உதவிக்கு டாக்டர் விவியன் நன்றி தெரிவித்தார். கொவிட்-19 தொற்று பொதுச் சுகாதாரத்தின்மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசிய அவர், கடந்த இரண்டரை ஆண்டுகாலம் ஆசியான் நாடுகளுக்குச் சவால்மிக்கதாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இப்போதைய கொவிட்-19 பரவலுக்குப் பிறகு இந்தியாவும் ஆசியானும் இன்னும் வலுவாக எழ முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா-ஆசியான் இடையிலான இந்தச் சந்திப்பு, இரு வட்டாரங்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் இப்போதைய, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை உருவாக்கவும் உதவும் என்றும் அமைச்சர் விவியன் சொன்னார்.
வட்டாரப் போக்கு, பன்முகத்தன்மை, உலகமயமாதல் ஆகியவற்றுக்கான ஒரு கலங்கரை விளக்கமாக ஆசியான் எப்போதும் திகழ்ந்து வருகிறது என்றும் திரு ஜெய்சங்கர் புகழாரம் சூட்டினார்.
"இவ்வட்டாரத்தில் ஆசியான் தனக்கென ஒரு முக்கிய இடத்தை வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்டது. இந்தோ-பசிபிக்கில் உருவெடுக்கும் உத்திபூர்வ, பொருளியல் கட்டமைப்பிற்கு அது ஓர் அடித்தளம் அமைத்துக்கொடுத்துள்ளது," என்றார் திரு ஜெய்சங்கர்.
"இதற்குமுன் இல்லாத அளவிற்கு இப்போது ஆசியானின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. வலுவான, ஒன்றுபட்ட, வளமான ஆசியானுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. இந்தோ-பசிபிக்கில் ஆசியானின் நடுநிலை முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது," என்றும் அவர் சொன்னார்.

