இந்தியாவில் நேற்று முன்தினம் கொவிட்-19 தொற்று பாதிப்பு 40% கூடியது. புதிதாக 12,213 பேரை கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக இந்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் ஒரே நாளில் 10,000 பேருக்குமேல் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது இதுவே முதன்முறை.
இதனையடுத்து, அந்நாட்டில் கொவிட்-19 தொற்றியோர் எண்ணிக்கை 43,257,730ஆக உயர்ந்தது.
அத்துடன், தொற்றால் மேலும் 11 பேர் இறந்துவிட, மொத்த உயிரிழப்பு 524,803 ஆனது.
அன்றாடம் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 2.35 விழுக்காடாகவும் வாராந்தர விகிதம் 2.38 விழுக்காடாகவும் இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் நேற்று முன்தினம் 4,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது, அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் 36% அதிகம். அங்கு கொரோனா தொற்றால் மேலும் இருவர் இறந்துவிட்டனர்.
மாநிலத் தலைநகர் மும்பையில் மட்டும் புதன்கிழமை ஒரே நாளில் 2,293 பேரிடம் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஜனவரி 23ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆக அதிக அன்றாட பாதிப்பு.
டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,118 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 1,375ஆக உயர்ந்து விட்டது.
அங்கு அன்றாடம் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 7.01 விழுக்காடாகக் கூடியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி 22ஆகப் பதிவான ஒருநாள் பாதிப்பு, நேற்று முன்தினம் 476ஆக அதிகரித்தது. மாநிலத் தலைநகர் சென்னையில் மட்டும் 221 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பும் பதிவாகியது. தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கொரோனா தொற்றால் மாண்டுபோனார்.
தமிழ்நாட்டில் இதுவரை 3,458,445 பேரை கொரோனா தொற்றிவிட்டது. அவர்களில் 38,026 பேர் இறந்துவிட்டனர்.

