கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத வகையில் இலங்கை கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் வாழ்வாதாரத்திற்காக அந்நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்குச் செல்ல பலரும் விரும்புகின்றனர்.
வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு தேவை என்பதால், கடவுச்சீட்டு கோரி இலங்கை குடிநுழைவு, குடிபெயர்வுத்துறை தலைமையகத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
சென்ற ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 91,331 பேருக்குக் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் 288,645 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உணவுப்பொருள், எரிபொருள், மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது; விலைவாசியும் உயர்ந்துவிட்டது.
இதனால் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க விரும்புவோருக்கு ஆதரவளிக்க அரசாங்கமும் விரும்புகிறது. அதன்மூலம் அவர்கள் தாய்நாட்டிற்கு அதிகமாகப் பணம் அனுப்புவர் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை. அண்மைய மாதங்களாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் சொந்த ஊருக்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கித் தரவுகள் குறிப்பிடுகின்றன.
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் கொழும்பு குடிநுழைவுத் துறை தலைமையகத்தில் பணியாற்றும் 160 ஊழியர்களும் சோர்ந்துபோய்விட்டதாகக் குடிநுழைவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
பணி நேரத்தை நீட்டித்துள்ள குடிநுழைவுத்துறை, முன்பைப்போல மூன்று மடங்கு கடவுச்சீட்டுகளை வழங்கி வருகிறது.
"மக்கள் விரக்தியில் இருப்பதால் அவர்களைச் சமாளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வளவு பேரின் தேவையையும் பூர்த்திசெய்யும் அளவிற்குப் போதுமான வசதி இல்லை என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அதனால், அவர்கள் கோபப்பட்டு, எங்கள்மீது பழிசுமத்துகின்றனர். ஆனாலும், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது," என்றார் திரு சந்திரலால்.

