சிங்கப்பூரில் ஊழியர் சந்தை தொடர்ந்து இறுக்கமாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் வேலை வாய்ப்புகள் புதிய உச்சத்தைத் தொட்டன.
தேவைகள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்க்கின்றன. ஏற்கெனவே காலியாக இருந்த இடங்களையும் அவை நிரப்புகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரை புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 128,100 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை டிசம்பரில் 117,100 ஆக இருந்ததாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட தொழிலாளர் சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.
வேலை இல்லாதவர்களுக்கும் கிடைக்கும் வேலைகளுக்கும் இடைப்பட்ட விகிதாச்சாரம் 2.42 ஆகக் கூடியது. அதாவது, வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைத்தன.
கடந்த 1998க்குப் பிறகு இதுதான் ஆக உச்சம் என்று அமைச்சு தெரிவிக்கிறது. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
இருந்தாலும் முந்திய காலாண்டில் 17%ஆக இருந்த வேலை வாய்ப்பு அதிகரிப்பு விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 9% ஆகக் குறைந்தது.
கட்டுமானம், உற்பத்தித் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் நிலவின. அந்த வேலைகள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர் களுக்கு அல்லாத வேலைகள் ஆகும்.
வெளிநாட்டு ஊழியர்களே அவற்றை வழிவழியாக பார்த்து வருகிறார்கள்.
நிதிச் சேவைகள், தகவல் தொடர்பு, பொது நிர்வாகம், கல்வி, நிபுணத்துவச் சேவைகள் ஆகிய துறைகளில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில் நுட்பர்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் இருந்தன.
இதனிடையே, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உள்ளிட்ட சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலை நியமனங்கள் 2019ல் கொரோனாவுக்கு முந்திய அளவைவிட 3.9% அதிகரித்து இருப்பதாக அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், மொத்த வேலை நியமனங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 42,000 அதிகரித்தன. இந்த அதிகரிப்பு முந்திய காலாண்டில் 47,900 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைச் சேர்க்காமல் கணக்கிடப்பட்ட ஒன்று. மொத்த வேலை நியமன அதிகரிப்பில் சிங்கப்பூர்வாசிகளாக அல்லாதவர்களே அதிகம் என்று அமைச்சு தெரிவித்தது.
படிப்படியாக எல்லைகள் திறக்கப்பட்டதும் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கும் வேலைகளை முதலாளிகள் நிரப்பியதும் இதற்குக் காரணம். இருந்தாலும்கூட கடந்த மார்ச் மாதம் இத்தகைய சிங்கப்பூர்வாசிகள் அல்லாத ஊழியர்களின் வேலை நியமனம் கொரோனாவுக்கு முந்திய அளவுடன் ஒப்பிடுகையில் 15% குறைவாகவே இருக்கிறது.
சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலை நியமனங்களைப் பார்க்கையில் பல துறைகளிலும் அப்படியும் இப்படியுமாகப் போக்குகள் காணப்பட்டன.
நிதிச் சேவைகள், தகவல் தொடர்பு, நிபுணத்துவச் சேவைகள், சுகாதார சமூகச் சேவைகள் போன்ற வளரும் துறைகளில் இவர்களுக்கான வேலை நியமனங்கள் தொடர்ந்து கூடின. மாறாக பயனீட்டாளர்களை எதிர்கொள்ளக்கூடிய துறைகளில் நியமனங்கள் குறைந்தன.
குடிமக்களைப் பொறுத்தவரை வேலையின்மை விகிதம் கொஞ்சம் குறைந்தது. சிங்கப்பூர்வாசிகளுக்கான நீண்டகால வேலையின்மை விகிதம் மேம்பட்டு இருக்கிறது.
ஆட்குறைப்பு சாதனை அளவாக குறைந்தது. அந்த எண்ணிக்கை 1,320 ஆக இருந்தது. அதாவது ஒவ்வொரு 10,000 ஊழியர்களுக்கும் ஆறு பேர் ஆட்குறைப்புக்கு ஆளானார்கள்.
முதல் காலாண்டில் ஆட்குறைப்புக்கு ஆளான சிங்கப்பூர்வாசிகளில் 71.5 விழுக்காட்டினருக்கு ஆறே மாதங் களுக்குள் வேலை கிடைத்துவிட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.