உலகளாவிய நிலையில் காணப்படும் உணவு நெருக்கடிக்குத் தீர்வுகாண அமெரிக்காவும் உக்ரேனும் மூன்றாண்டு வேளாண்மை பங்காளித்துவ உடன்பாட்டை செய்து கொண்டு இருப்பதாக ஐநாவில் அமெரிக்க வேளாண்மை அமைச்சர் அறிவித்தார்.
அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பில், அமெரிக்க அமைச்சர் டாம் வில்சாக்கும் உக்ரேனின் வேளாண்மை அமைச்சரும் சில நாட்களுக்கு முன் மெய்நிகர் ரீதியில் கையெழுத்திட்டார்கள்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் உலகளவில் உணவு நெருக்கடி பெரிதும் அதிகரித்துவிட்டது.
உணவு தானியங்களையும் விதைகளையும் ஏற்றுமதி செய்யக்கூடிய உலகின் நான்காவது ஆகப் பெரிய நாடாக உக்ரேன் இருந்தது. ஆனால், போர் காரணமாக இந்த நிலை மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் உக்ரேனுக்குத் தொழில்நுட்ப உதவியை வழங்குவதில் அந்த உடன்பாடு ஒருமித்த கவனம் செலுத்தும் என்று அமெரிக்க அமைச்சர் தெரிவித்தார்.
போருக்குப் பிறகு உக்ரேன் தனது வேளாண் தொழில்துறையைச் சீரமைக்க அமெரிக்கா உதவும் என்றார் அவர். உணவு நெருக்கடியைத் தீர்க்க இதர பல நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும் என்றார் திரு வில்சாக்.
உக்ரேன் போர் காரணமாக உலகளவில் உணவுப் பொருள்கள், எரிபொருள் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துவிட்டது. மத்திய கிழக்கு, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டது. பருவநிலை மாற்றங்களும் பிரச்சினையாக உள்ளன.
இவற்றின் காரணமாக உணவு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்று ஐநா எச்சரித்து இருக்கிறது.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து இருப்பதால் அந்த நாட்டில் ஏறக்குறைய 25 மில்லியன் டன் தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க உலகளாவிய முயற்சி இடம்பெற்று வருகிறது.

