இந்தியாவில் 'அக்னி பாதை' எனும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் திட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதால் புதிய சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
அக்னிபாதை திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் துப்பாக்கிப் படைகளில் பத்து விழுக்காடு இடம் ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்த இரு படைப் பிரிவுகளிலும் வயது வரம்பில் மூன்று ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் அமைச்சு முன் வந்துள்ளது.
'அக்னி பாதை' திட்டத்துக்கு எதிராக பீஹார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஹரியானா, தெலுங்கானா மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் பீஹார் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு பேராட்டத்துக்கு நேற்று மாணவர்கள் அழைப்பு விடுத்ததால் பதற்றம் அதிகரித்தது.
இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகத் தளங்கள் முடக்கப்பட்டதாக பீஹாரின் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இம்மாதம் 14ஆம் தேதி 'அக்னி பத்' என்று இந்தியில் குறிப்பிடப்படும் 'அக்னி பாதை' திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்ற இது வழி செய்கிறது.
ஆயிரக்கணக்கான இளையர் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும் ராணுவத்தில் நிரந்தரமாக வேலை செய்யும் கனவை அது சிதைத்து விட்டதாக இந்திய இளையர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் இத்திட்டத்திற்கு எதிராக இளையர்கள் போர்க் குரல் எழுப்பி உள்ளனர். ரயில் மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்துக்கு அருகே சில இளையர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தி னர்.
தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்தும் ஏராளமான இளையர்கள் சென்னையை நோக்கி படையெடுக் கலாம் என்பதால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

