உக்ரேன் போர் ஆண்டுக்கணக்கில் நீடிக்கக்கூடும் என்று நேட்டோ எச்சரித்துள்ளது. உக்ரேன் படை வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் தேவை என்று அந்த அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பர்க் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதனிடையே, உக்ரேனில் மரியபோல் நகரில் எஃகு ஆலை ஒன்றைத் தற்காத்த உக்ரேன் உயர்நிலை தளபதிகள் இரண்டு பேர் புலன்விசாரணைக்காக ரஷ்யாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு இருப்பதாக 'டாஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்தது.
உக்ரேனின் கிழக்கு நகர்களில் தாக்குதலை ரஷ்யா கடுமையாக்கி வருவதால் மோசமான சூழ்நிலை தவிர்க்க இயலாதது என்றும் அதற்கு தான் ஆயத்தமாகி வருவதாகவும் லுஹான்ஸ்க் வட்டார ஆளுநர் ஹைடாய் கூறினார்.
இவ்வேளையில், மைகோலியாவ், ஒடேசா ஆகிய நகர்களுக்குச் சென்று போர்க்களப் பகுதிகளைப் பார்வையிட்ட உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி இந்தப் போரில் உக்ரேன் வெற்றி பெறும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புட்டின் இம்மாதம் 17ஆம் தேதி முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசியபோது, ரஷ்யா மீது தடைகளை விதித்த மேற்கத்திய நாடுகளைச் சாடினார். தடைகளை எல்லாம் ரஷ்யா மீண்டு வரும் என்று அவர் உறுதிபட கூறினார்.
இதற்கிடையே, உக்ரேனும் மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரானவதற்கான வேட்பாளர்களாக ஆவதற்கு அந்த ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பு பரிந்துரை செய்து இருக்கிறது.
இதன்மூலம் உக்ரேனும் மால்டோவாவும் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
அடுத்த வாரம் நடக்கும் உச்சநிலைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படுமானால் அது உக்ரேனுக்கு தார்மீக தைரியத்தைக் கொடுப்பதாக இருக்கும்.
அதோடு, உக்ரேனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய அதிபர் புட்டினுக்கு மேற்கத்திய நாடுகள் வைக்கும் ஒரு குட்டாகவும் அது இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் உக்ரேனில் ரஷ்யத் தாக்கு தல்கள் தொடர்கின்றன.

