ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம் புதிதாக 300 விமானங்களை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது, விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றில் ஆகப் பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக விளங்கும்.
அண்மையில் டாடா குழுமத்திடம் கைமாறிய ஏர் இந்தியா நிறுவனம், ஏர்பஸ் ஏ320 அல்லது போயிங் 737 மேக்ஸ் அல்லது அவ்விரு விமானங்களையும் வாங்கும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 300 போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் விலை $40.5 பில்லியனாக இருக்கும் என்றும் ஆயினும், பெரிய அளவிலான கொள்முதலின்போது விலைக்கழிவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், 300 விமானங்களைத் தயாரித்து, வழங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஏர்பஸ் நிறுவனம் ஒரு மாதத்திற்கு, குறுகிய உடல்பகுதியைக் கொண்ட 50 விமானங்களைத் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் அந்த எண்ணிக்கையை 65 ஆகவும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 75 ஆகவும் உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், 300 விமானங்களை வாங்குவது தொடர்பில் ஏர் இந்தியா, போயிங் நிறுவனங்கள் கருத்துக் கூற மறுத்துவிட்டன.
அதே வேளையில், இப்போதைய மற்றும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும் ஆனாலும் விமானங்களை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக வைக்கப்படும் என்றும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, நீண்டதொலைவு பறக்கும் ஏ350 விமானங்களை வாங்குவது தொடர்பில் ஏர்பஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் விரைவில் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று இம்மாத முற்பகுதியில் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது.
அவ்விமானங்கள் புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவின் மேற்குக் கடலோரம்வரை செல்லும் திறன் படைத்தவை.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் இந்திய அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்திடம் விற்கப்பட்டது. நட்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18,000 கோடி ரூபாய் விலைகொடுத்து வாங்கியது. அதில் 15% தொகை அரசாங்கத்திற்குச் செல்லும் என்றும் எஞ்சிய தொகை ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டது.

