இலங்கை அதிபர் செயலகம் மற்றும் நிதியமைச்சின் நுழைவாயில்களை மறித்து நேற்றுக் காலை போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆயினும், கைதான 21 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்கள் அனைவரும், கோத்தபாய ராஜபக்சே விலக வேண்டும் எனக் காலி முகத்திடல் பகுதியில் முகாமிட்டுப் போராடி வருபவர்கள் எனக் கூறப்பட்டது.
இதன் காரணமாக, அதிபர் செயலகப் பணியாளர்களுக்கும் அங்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அத்துடன், அனைத்துலகப் பண நிதியப் பேராளர் குழுவிற்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதும் தாமதமானது.
பின்னர் அக்குழுவினருடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அனைத்துலகப் பண நிதியப் பேராளர் குழு இம்மாதம் 30ஆம் தேதிவரை இலங்கையில் இருந்து, பேச்சுவார்த்தைகளைத் தொடரும்.
"இந்தக் கடினமான காலகட்டத்தில், அனைத்துலகப் பண நிதியத்தின் கொள்கைகளுக்குட்பட்டு, இலங்கைக்கு ஆதரவளிக்கும் எங்களது கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்துகிறோம்," என்று அக்குழு தெரிவித்தது.
இலங்கையைப் பொருளியல் நெருக்கடியில் இருந்து மீட்க உதவுவதற்கு அனைத்துலகப் பண நிதியம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
'படகில் வந்தால் அனுமதியோம்'
இதற்கிடையே, படகு வழியாக வரும் இலங்கையர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அடைக்கலம் நாடி படகு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால், அதனைத் தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்துவதற்காக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ'நீல் அவசரமாக நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் புதிய ஆட்சி அமைந்தபின், அடைக்கலம் நாடி நான்கு படகுகளில் பயணம் செய்த இலங்கையர்களை ஆஸ்திரேலிய, இலங்கை அதிகாரிகள் இடைமறித்தனர்.
இந்நிலையில், இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்து இருக்கிறது.