பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகரிப்பு திட்டமிட்டபடி நடை
முறைப்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.
விலைவாசி அதிகரித்து வருவதால் ஜிஎஸ்டி அதிகரிப்பு ஒத்திவைக்கப்படுமா என்று செய்தியாளர் கூட்டத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
உயரும் பணவீக்கம், அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை ஜிஎஸ்டி அதிகரிப்பு மேலும் கடுமையாக்கும் என்ற கவலை சிங்கப்பூரர்களுக்கு இருப்பது தமக்குத் தெரியும் என்றார் திரு வோங். ஆனால் ஜிஎஸ்டி அதிகரிப்பு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஜிஎஸ்டி அதிகரிப்பு இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சருமான திரு வோங் தெரிவித்திருந்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று ஜிஎஸ்டி 7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்த்தப்படும். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று அது 8 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காடாக உயர்த்தப்படும்.
"செலவினங்கள் வெகு விரைவாக அதிகரித்து வருகின்றன. மூப்படையும் மக்கள்தொகை, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் இதற்கு முக்கிய காரணங்கள். அரசாங்க வருவாயை உயர்த்த பல சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துள்ளோம். வரவுசெலவுத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களைச் செய்தோம். வருமான வரி, சொத்து வரி, சொகுசு கார் வரி ஆகியவை இதில் அடங்கும். ஆனாலும் வருவாயை உயர்த்த இவை போதுமானதாக இல்லை. எனவே, ஜிஎஸ்டியை அதிகரிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது," என்றார் திரு வோங்.
நிலையற்றதன்மை, சவால்மிக்க பொருளியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி அதி
கரிப்பை முடிந்தவரை ஒத்திவைக்க வும் இரண்டு கட்டங்களாக அதை அதிகரிக்கவும் முடிவெடுத்ததாக திரு வோங் தெரிவித்தார்.

