இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் குறைக்க அந்நாட்டு அமைச்
சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு இலங்கை அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மிகக் கடுமையான பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்
பட்டுள்ள இலங்கையில், அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி கடந்த சில மாதங்களாக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்புடையதுதானா என்பதை ஆராய அது நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும் என்று செய்தி யாளர்களிடம் இலங்கை அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் பன்டுலா குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என நாளுக்கு நாள் குரல்கள் வலுக்கின்ற நிலையில், தம்மீதும் தமது குடும்பத்தார் மீதும் மக்களுக்கு இருக்கும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
இதன் காரணமாக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு அவர் இணங்கியுள்ளார்.
2019ஆம் ஆண்டில் திரு கோத்தபாய ராஜபக்சே அதிபர் பதவி ஏற்ற பிறகு தமக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் நோக்குடன் அரசமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
திரு ராஜபக்சேக்கு அசுர பலம் கொடுத்த அந்தத் திருத்தங்களை தற்போது மேற்கொள்ளப்படும்
முயற்சிகள் எந்த அளவுக்குப் பலவீனத்தைத் தரும் என்ற கேள்வி யை இலங்கை வழக்கறிஞர்
சங்கம் எழுப்பியுள்ளது.
இந்த ஆக அண்மைய சட்டத் திருத்தங்களைச் சட்டமாக்க மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இதுகுறித்து திரு குணவர்த்தன தகவல் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால் நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என அவர் கூறினார்.
"ஆக அண்மைய சட்டத் திருத்தங்கள் ஆட்சி முறையை மேம்
படுத்தும். இதுவே அனைத்துலக பண நிதியமும் கடன் வழங்கும் மற்ற அமைப்புகளும் முன்வைத்துள்ள நிபந்தனைகள்," என்று திரு குணவர்த்தன கூறினார்.

