பாலர்பள்ளிகளில் மூன்று ஆண்டுகளில் மேலும் இடங்கள் கிடைக்கும்
வளரும் பருவத்தில் உதவி தேவைப்படக்கூடிய சிறார்களுக்கு சிறப்பு ஆதரவு தரும் ஒரு செயல்திட்டம் நடப்புக்கு வந்து இருக்கிறது. அந்தத் திட்டம் பாலர்பள்ளிகளில் அத்தகைய சிறார்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கித் தரும்.
'எல்லாருக்குமான ஆதரவுச் செயல்திட்டம்' என்று அழைக்கப்படும் அந்தத் திட்டம் 2021ல் தொடங்கப்பட்டது.
அதன்கீழ் அடுத்த மூன்றாண்டுகளில் பாலர்பள்ளிகளில் 100 இடங்கள் உருவாக்கப்படும். சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சுவெலிங் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார்.
இளம்பருவ மேம்பாட்டு முகவை அமைப்பு நடைமுறைப்படுத்தும் அந்தச் செயல் திட்டத்தின் கீழ் இப்போது ஏழு பாலர்பள்ளிகளில் 38 சிறார்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
புதிய செயல்திட்டம் மூன்று முதல் ஆறு வரை வயதுள்ள உடல் வளர்ச்சி உதவி தேவைப்படும் சிறாருக்கு உதவுகிறது.
பாலர்பள்ளி சூழலில் அத்தகைய சிறார்களுக்குத் தேவைப்படும் உதவிகளும் ஆதரவும் பாலர்பள்ளி கல்வியுடன் சேர்த்து முன்னதாகவே கிடைக்க அந்தச் செயல்திட்டம் வகை செய்கிறது.
அமைச்சர் திருவாட்டி சுன், நேற்று உட்லண்ட்சில் இருக்கும் புளோக் 406ல் அமைந்துள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' நிலையத்துக்கு வருகையளித்தார்.
இந்தப் பள்ளி எல்லாருக்குமான ஆதரவுச் செயல்திட்டத்தின்கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாகும். இந்தப் பள்ளியில், உதவி தேவைப்படும் மாணவர்களுக்குத் தோதாக உள்கட்டமைப்பு வசதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதர மாணவர்களுடன் சேர்ந்து உதவி தேவைப்படும் மாணவர்களும் கல்வி கற்று மேம்பட உதவும் வகையில் மேசை, நாற்காலிகள் போன்ற பலவும் பொருத்தமாக வடிவமைக்கப்பட்டு இடம்பெறுகின்றன என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய சிறார்கள் படிப்படியாக ஒவ்வொன்றையும் செம்மையான முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் பல கல்விச் சாதனங்களையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள் என்று திருவாட்டி சுன் தெரிவித்தார். மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர்பள்ளியை என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ் அமைப்பு நிர்வகித்து நடத்துகிறது.
விரைவாக பேச வராத, மற்றவருடன் கலந்து பழகத் தெரியாத குறைபாடுகளுடன் கூடிய சிறார்களுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளுடன் அந்தப் பள்ளியில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப் பருவத்தை எட்டுவதற்கு வழக்கமான காலத்தைவிட அதிக காலம் பிடிக்கக்கூடிய குறைபாடுள்ள சிறார்களுக்கும் அந்தப் பள்ளி உதவுகிறது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய 'என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்' அமைப்பின் சிறார் ஆதரவு சேவைகள் துறை மூத்த நிர்வாகி திருவாட்டி டேனிஸ் பிதியா, இந்த அமைப்பின் இரண்டு நிலையங்களில் கூரைகள் தாழ்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வகுப்பறையில் இரைச்சல் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
ஆசிரியர்கள் தங்களுடைய வகுப்பை சிறந்த முறையில் நிர்வகிக்க இது உதவுகிறது என்று அவர் விளக்கினார்.
இதனிடையே, ஆறு வயது வரையுள்ள உடல் வளர்ச்சி உதவி தேவைப்படக்கூடிய சிறார்களைப் பராமரிக்கும் ஊழியருக்கும் பெற்றோருக்கும் உதவும் வகையில் வழிகாட்டி கையேடு ஒன்றை இளம்பருவ மேம்பாட்டு முகவை நேற்று வெளியிட்டது.
அந்தக் கையேட்டை கல்வி அமைச்சு, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை உள்ளிட்ட பல அமைப்புகளும் சேர்ந்து உருவாக்கி உள்ளன. எல்லாருக்குமான பாலர்பள்ளி பணிக்குழு என்ற ஓர் அமைப்பின் பரிந்துரையைத் தொடர்ந்து அந்த கையேடு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2019ல் அந்தப் பணிக்குழுவை அமைத்தது. பெற்றோர்கள் பொதுவாக பல இணையத் தளங்களையும் தேடி தங்கள் பிள்ளைகளுக்கான ஆதரவு அம்சங்கள் பற்றி தெரிந்துகொள்வார்கள்.
அவர்களுக்கு இந்தக் கையேடு பெரிதும் உதவும் என்று திருவாட்டி சுன் தெரிவித்தார்.

