ஹங்கேரிய தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக நீர்விளையாட்டு வெற்றியாளர் போட்டியில் கலைநயத்துடன் நீச்சலடிக்கும் வீராங்கனை அனிதா அல்வாரெஸ் நீச்சல் குளத்தில் மயக்கம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, இவருடைய பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரியா ஃபுவென்டஸ் நீச்சல் குளத்திற்குள் உடனடியாகக் குதித்து அல்வாரெஸ் மீட்டார்.
அமெரிக்க நீச்சல் குழுவைச் சேர்ந்த அல்வாரெஸ், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தனிநபர் இறுதிப் போட்டியை முடித்தவுடன் மயங்கிய நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கினார். அப்போது இவர் மூச்சுவிடவில்லை.
"எனக்கு அது பேரதிர்ச்சியைத் தந்தது. உயிர்க் காப்பாளர்கள் உடனடியாக காப்பாற்ற வராததால் நான் நீச்சல் குளத்திற்குள் குதித்தேன்.
"அவர் மூச்சுவிடாததால் எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் நலமாக உள்ளார்," என்று ஃபுவென்டஸ் கூறினார்.
நீச்சல் குளத்தின் அடியிலிருந்து மீட்கப்பட்ட அல்வாரெஸ், தூக்குப் படுக்கையில் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் நலமாக இருப்பதாக அமெரிக்க நீச்சல் குழு பின்னர் அறிக்கை வெளியிட்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை பதக்கம் வென்றுள்ள ஃபுவென்டஸ், போட்டியின்போது அல்வாரெஸ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாகச் சொன்னார்.
"அவருடைய நுரையீரல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அவர் மூச்சுவிடத் தொடங்கியவுடன் அனைத்தும் சீரானது," என்று ஃபுவென்டஸ் கூறினார்.
நேற்று ஓய்வெடுத்துக்கொண்ட அல்வாரெஸ், கூடுதல் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இன்று நடைபெறும் குழு விளையாட்டில் போட்டியிட விரும்புவதாக ஃபுவென்டஸ் சொன்னார்.
தமது மூன்றாவது உலக வெற்றியாளர் போட்டியில் 25 வயது அல்வாரெஸ் பங்கெடுத்தார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டி ஒன்றிலும் அவர் மயங்கியதாகக் கூறப்படுகிறது.

