உணவு, மின்சாரம், எரிவாயு விலை உயர்வு எதிரொலி
சிங்கப்பூரில் மூலாதாரப் பயனீட்டாளர் விலைகள் கடந்த மாதம், 13 ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமாக உயர்ந்தன. உணவு, மின்சாரம், எரிவாயு விலை அதிகரிப்பு இதற்கான காரணங்களில் அடங்கும்.
தங்குமிடம், தனியார் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 3.6 விழுக்காடாக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இது 3.3 விழுக்காடாக இருந்தது.
2008ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை. அப்போது மூலாதாரப் பணவீக்கம் 4.2 விழுக்காட்டை எட்டியிருந்தது.
வரும் மாதங்களில் மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து, ஆண்டிறுதியில் மிதமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று கூறின.
கடந்த மாதம் பயனீட்டாளர் விலைகள் 5.6 விழுக்காடு உயர்ந்தது. ஒப்புநோக்க, ஏப்ரலில் அது 5.4 விழுக்காடு அதிகரித்து இருந்தது.
கடந்த மாதம் உணவு விலை உயர்வு 4.5 விழுக்காட்டைத் தொட்டது. ஏப்ரலில் அது 4.1 விழுக்காடாக இருந்தது.
மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 19.9 விழுக்காடு உயர்ந்தன. மின்சார விற்பனையாளர்கள் வழங்கிய மின்சாரத் திட்டங்களின் சராசரி விலை உயர்வே இதற்குக் காரணம்.
சேவைப் பணவீக்கம் 2.6 விழுக்காடாக உயர்ந்தது. விடுமுறைக்கான செலவினங்களும் போக்குவரத்துச் சேவைக் கட்டணங்களும் வேகமாக உயர்ந்தன.
சில்லறை, இதர பொருள்களின் பணவீக்கம் 1.8 விழுக்காடாக இருந்தது. துணிமணிகள், காலணிகள், தனிநபர் பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்திருப்பது இதற்குக் காரணம்.
வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்ததால் தங்குமிடச் செலவு 4 விழுக்காடு கூடியது.
எண்ணெய் விலை உயர்வு காரணமாக, தனியார் போக்குவரத்து விலைக் கட்டணம் 18.5 விழுக்காடு உயர்ந்தது.
ரஷ்யா-உக்ரேன் போர், வட்டார அளவில் கொவிட்-19 பெருந்தொற்று நிலவரம் காரணமாக பொருள்களின் விநியோகத் தொடரில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால், உலகப் பணவீக்க நெருக்குதல் நிலை தொடர்ந்து வலுவாக இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கூறின.
புவிசார் அரசியல் பதற்றநிலைகள், கடுமையான விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக குறுகிய காலத்தில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றமாக இருக்கும். அதேவேளையில், உணவு, இதர பொருள்களின் விலைகளும் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் தொழிலாளர் சந்தை தொடர்ந்து இறுக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சம்பள உயர்வுக்கான ஆதரவு நிலவும் என ஆணையமும் அமைச்சும் விளக்கின.
அதிகரித்துவரும் பணவீக்கத்தைத் தணிக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து நாணயக் கொள்கையை மூன்று முறை கடுமையாக்கி உள்ளது.

