ஒற்றைத் தலைமை பற்றி முடிவெடுக்க ஜூலை 11ல் மீண்டும் கூடும் அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின்கீழ் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்மொழியப்பட்டதாலும், கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கமும் வெளிநடப்பு செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத ஒருவர், பன்னீர்செல்வத்தை நோக்கி தண்ணீர் போத்தலை வீசினார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதிலிருந்தே ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலியுறுத்தி குரல்கள் கிளம்பின. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தொண்டர்கள் குரல் எழுப்பினர்.
"பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டனர். அவர்கள் முன்வைக்கும் ஒரேயொரு கோரிக்கை, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பதே. அந்த ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து, அடுத்த கூட்டத்தை தலைமை எப்போது கூட்டுகிறதோ, அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்," என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மேடையில் கூறினார்.
அதன் பிறகு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார். நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நிறைவுபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற வானகரத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் செய்தி - பக்கம் 4ல்