பொருளியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மேலும் உதவும் விதமாக இலங்கை அதிபர், பிரதமருடன் இந்தியாவின் மூத்த அரசதந்திரி ஒருவர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்தியாவசியப் பொருள்களை வாங்க அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு US$5 பில்லியன் தேவைப்படுகிறது.
இலங்கை தலைநகர் கொழும்பில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய நிதி அமைச்சு அதிகாரிகளும் அவருடன் இருந்தனர்.
"முதலீடுகளை ஊக்குவித்து, பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை பொருளியல் மீட்சிக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது," என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் பதிவிட்டார்.
பிரதமர் ரணில், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சு அதிகாரிகள் ஆகியோரை இந்தியப் பேராளர் குழு தனியாக சந்தித்ததாகவும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
"இலங்கையின் பொருளியல் நிலவரம், குறுகியகால, நீண்டகால உதவிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் இந்தியப் பேராளர் குழு பேச்சுவார்த்தை நடத்தும்," என்று இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இவ்வாண்டு இலங்கைக்கு உதவி அளித்துவரும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது. இலங்கைக்கு இந்தியா US$4 பில்லியன் (S$5.6 பி.) வழங்கியிருப்பதாக பிரதமர் ரணில் நாடாளுமன்றத்தில் இந்த வாரம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கூடுதல் ஆதரவு வழங்குவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கை எரிபொருள் வாங்கவும் உரம் இறக்குமதி செய்யவும் US$500 மில்லியன் கடனுதவி வழங்குவதும் இதில் அடங்கும்.
எரிபொருள் விநியோகத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இலங்கை உதவி கோரி உள்ளது.
இந்நிலையில், எரிவாயு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 63 வயது ஆடவர் ஒருவர் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அவர் தன் வாகனங்களுக்கு டீசல் வாங்க குறைந்தது ஐந்து நாள்களாக வரிசையில் காத்து இருந்ததாகக் கூறப்பட்டது. அவர் தம்முடைய கனரக வாகனத்திற்குள் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.