சிங்கப்பூர் வரும் பயணிகள் தங்களது உடைமைகள் தொடர்பாக விசாரிப்பது அதிகரித்து வருவதாக சாங்கி விமான நிலையத்தில் விமானம் மற்றும் பயணம் தொடர்பான சேவைகளைக் கையாளும் சேட்ஸ் (Sats) தெரிவித்துள்ளது.
புறப்படும் விமான நிலையத்தில் நிகழும் தவறுகள் காரணமாக இங்கு வந்திறங்கியதும் பயணப்பெட்டிகளைக் காணவில்லை என்றும் அந்தப் பெட்டிகள் சேதமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இங்கு வரும் பெரும்பாலான விமானங்களுக்கான சேவை இலக்குகள் எட்டப்பட்டபோதிலும், சில பயணிகள் தங்களது உடைமைகளைப் பெறுவதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் கூறுவதாக சேட்ஸ் தெரிவிக்கிறது.
மனிதவளம் உலகளவில் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்கும் விமான நிலையங்கள் சிலவற்றில் அசௌ
கரியங்கள் தொடருகின்றன.
இதேபோன்ற நிலைமை பெரும்பாலான விமான நிலையங்களில் காணப்படுகிறது. விமானப் பயணங்கள் அதிக அளவில் மீண்டுவரும் வேளையில் பயணிகளின் உடைமைகள் மற்றும் நீண்ட வரிசை
களைச் சமாளிக்க முடியாமல் அவை போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் இவ்வாறு சிரமப்படும் விமான நிலையங்களில் ஒன்று.
இருப்பினும் சிங்கப்பூரிலும் ஆசியாவிலும் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இங்கிருந்து கிளம்புவோரின் உடைமைகள் பத்திரமாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்போது வெளிநாடுகளில் காணப்படும் உடைமைகள் தொடர்பான பிரச்சினை இங்கும் எழக்கூடும் என்ற நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பாக 'சேட்ஸ்' பேச்சாளர் கூறுகையில், "பயணத்தைத் தொடங்கும் விமான நிலையங்களில் உள்ள பிரச்சினைகள் இங்கு எங்கள் மீதும் பயணிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
"உடைமைகள் காணாமல் போனது மற்றும் சேதமடைந்தது தொடர்பாக பயணிகளிடம் இருந்து வரும் விசாரிப்புகள் அதிகரிப்பதைக் கவனித்து வருகிறோம்," என்றார். இருப்பினும் எத்தனை பயணிகள் அவ்வாறு சிரமப்பட்டார்கள் என்ற விவ ரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
"சில விமானங்களில் வந்திறங்கும் பயணிகள் தங்களது உடைமைகளைப் பெற நீண்டநேரம் காத்திருப்பதற்கு மோச மான வானிலை, அதிகமான பயணிகள் வரத்து போன்ற பல காரணங்கள் உள்ளன. அதேநேரம் இங்கிருந்து பயணத்தைத் தொடங்கும் பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக விமானநிலையம் வந்துவிடுமாறு அறிவுறுத்துகிறோம். சில நாடுகளில் இன்னும் தொடரும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், மேம்
படுத்தப்பட்ட பயண சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைச் சமாளிக்க வேண்டி இருப்பதால் முன்கூட்டியே அவர்கள் விமானநிலையம் வந்துவிடுமாறு கூறி
வருகிறோம்," என்றும் அவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
ஒரேநேரத்தில் எத்தனை பயணிகள் வந்தால் சமாளிக்க இயலும் என்பதன் அடிப்படையில் விமானங்களின் எண்ணிக்கை, அவற்றின் கால அட்டவணை ஆகியன குறித்து விமான நிறுவனங்களுடனும் விமான நிலையத்துடனும் 'சேட்ஸ்' பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
புறப்படும் இடத்து தவறுகளால் தவறவிடும், பழுதடையும் பயணப்பெட்டிகள்