கோழிகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விலை உச்சவரம்பு அறிவிக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்து உள்ளார்.
உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோ கோழி தற்போது 8.90 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், கோழிகளுக்கான தீவனத்தின் விலை பலமடங்கு ஏறிவிட்டதால் இனியும் இந்த விலைக்கு கோழிகளை விற்க முடியாது என்று கோழிப் பண்ணை முதலாளிகள் அறிவித்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் சந்தை வியாபாரிகளே விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்போவதாக அரசாங்கம் சொல்லி இருந்தது. இந்நிலையில் திரு இஸ்மாயில் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
கோழிகளுக்கான விலையில் புதிய உச்சவரம்பை விரைவில் அரசாங்கம் வெளியிடும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினத்தால் மக்களுக்குக் கோழி விலையால் கூடுதல் சுமை ஏற்படக்கூடாது என்ற கோணத்தில் புதிய விலை உச்சவரம்பு பற்றி முடிவுஎடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய அதிகபட்ச விலை என்ன என்பதை வேளாண், உணவுத் துறை அமைச்சர் ரோனல்ட் கியான்டீ அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டில் விலையை நிலைப்படுத்தவும் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் கோழி ஏற்றுமதிக்கு ஜூன் 1 முதல் மலேசியா தடை விதித்தது.
அதனால், சிங்கப்பூரில் கோழி விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டது. அதனைச் சமாளிக்க இந்தோனீசியாவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் முயன்று வருகிறது.
சில நாள்களுக்கு முன்னர் மலேசியா கோழி ஏற்றுமதித் தடையில் சில தளர்வுகளை அறிவித்தது.
கம்போங் கோழி எனப்படும் நாட்டுக் கோழிகளையும் கறுப்புக் கோழிகளையும் சிங்கப்பூர் இறக்குமதி செய்துகொள்ளத் தடை இல்லை என்று மலேசியா கூறியது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் விற்பனையாளர்கள் கம்போங் கோழிகளையும் கறுப்புக் கோழிகளையும் வாங்கி வருகின்றனர்.