ஓஸ்லோ: ஓஸ்லோ நகரின் மத்தியில் உள்ள இரவு மதுபானக் கூடங்களில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தி நார்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 21 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
காயம் அடைந்தவர்களில் பத்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். தலைநகரின் மத்தியில் மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள மதுபானக் கூடங்களில் சிங்கப்பூர் நேரப்படி காலை ஏழு மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதுவொரு பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
சந்தேக நபர், ஈரான் வம்சா வளியைச் சேர்ந்த நார்வே குடி மகன்.
போதைப் பொருள், கத்தி வைத்திருந்தது போன்று சிறு குற்றச் செயல்களுக்காக அவர் ஏற்கெனவே உள்ளூர் புலனாய்வுத் துறைக்கு அறிமுகமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் அவர் மட்டுமே தனியாகச் செயல்பட்டு உள்ளார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஓஸ்லோ நகரில் நடைபெறவிருந்த சில முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.