உக்ரேனிய தலைநகரில் நேற்று அதிகாலை நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்த நகரின் மேயர் விட்டாலி லிச்சிகோ டெலிகிராம் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தார்.
அந்தச் சம்பவங்களில் ஏற்பட்ட உயிருடற்சேதம் பற்றிய உடனடி தகவல் எதுவும் தெரியவில்லை.
மருத்துவ வண்டிகளும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும் பல விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இரண்டு கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு அப்புறப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரேன் மீது ரஷ்யா படைஎடுத்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ரஷ்யாவுக்கு எதிர்பார்த்தபடி வெற்றி கிட்டவில்லை. இருந்தாலும் பல நகர்களை அது தன்வசப்படுத்தி இருக்கிறது. இப்போது அது தலைநகர் கியவ் மீது தன்னுடைய கவனத்தைத் திருப்பி இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, இன்னும் சில மாதங்களுக்குள் பெலருஸ் நாட்டுக்கு அணுவாயுத ஏவுகணைகளை ரஷ்யா அனுப்பும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் சனிக்கிழமை அறிவித்தார்.
பெலருஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மாஸ்கோவுக்கு வருகை அளித்தார். அவரை வரவேற்று அதிபர் புட்டின் உபசரித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இவ்வேளையில், ஜி7 அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளில் நான்கு நாடுகள், ரஷ்ய தங்க ஏற்றுமதிகளுக்குத் தடை விதிக்கப்போவதாக அறிவித்து இருக்கின்றன.
மாஸ்கோவுக்கு எதிராக பல நாடுகளும் பல்வேறு தடைகளை விதித்து இருக்கின்றன. இந்தத் தடைகளின் பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் பெரும் பணக்காரர்கள் தங்கத்தை வாங்க முயற்சி செய்வார்கள்.
இதைத் தடுப்பதற்காக பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் ரஷ்ய தங்க ஏற்றுமதிகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்து இருக்கின்றன.
இவ்வேளையில், அமைதி முயற்சியை மேற்கொண்டு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உக்ரேன், ரஷ்ய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கு கதவுகளைத் திறந்துவிடும்படி உக்ரேன், ரஷ்ய அதிபர்களை அப்போது அவர் கேட்டுக்கொள்வார்.
உடனடியாக சண்டை நிறுத்தத்தை அறிவிக்கும்படி ரஷ்ய அதிபர் புட்டினுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உக்ரேன் போர் நிறுத்தப்பட வேண்டும். உலக உணவுப்பொருள் விநியோகக் கட்டமைப்பு மறுபடியும் சுறுசுறுப்பு அடைய வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் குறிப்பிட்டார்.
ஜி7 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மனி புறப்படுவதற்கு முன்னதாக இந்தோனீசிய அதிபர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
உக்ரேனில் அமைதி திரும்ப முயற்சிக்கும்படி ஜி7 நாடுகளுக்கு தான் ஊக்கமூட்டப் போவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

