கொள்முதல் ஏற்பாடுகளைப் பலமுனைப்படுத்தியதாகவும் பிரதமர் லீ விளக்கம்
கொவிட்-19 தலைதூக்கியது முதலே உணவுப்பொருள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படலாம் என்று சிங்கப்பூர் எதிர்பார்த்து இருந்தது. அதனால் அது முன்னதாகவே போதிய உணவுப்பொருள் இருப்பை உறுதிப்படுத்தியது.
அதோடு மட்டுமின்றி, உணவுப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் பலமுனைப்படுத்திய தாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
உணவுப்பொருள்களுக்கு நாடுகள் ஏற்றுமதி தடை விதிப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
உக்ரேன் போர் காரணமாக உணவு மூலப்பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. விலைகளும் அதிகரித்து இருக்கின்றன.
இவற்றின் காரணமாக கோழி முதலானவற்றின் உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை பிரதமர் சுட்டினார்.
உணவுப்பொருள்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற முறையில், சிங்கப்பூருக்கு இது ஒரு பிரச்சினை என்றார் திரு லீ. ஆனால், இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்படும் என்பதை கொவிட்-19 தொற்று தொடங்கியது முதலே சிங்கப்பூர் எதிர்பார்த்து இருந்தது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோழி உள்ளிட்ட இறைச்சி பொருள்கள், காய்கறிகள், கோதுமை போன்ற தானியங்கள் சிங்கப்பூருக்கு வருவது தடைபடலாம் என்று அரசாங்கம் அப்போது கவலை அடைந்தது.
அதனால் ஏற்கெனவே அதிகளவு இருப்பை சிங்கப்பூர் உறுதிப்படுத்தியது. கொள்முதல் ஏற்பாடுகளில் மேலும் பல இடங்களை உள்ளடக்கும் வகையில் அது பலமுனைப்படுத்தியது என்று திரு லீ விளக்கம் அளித்தார்.
ருவாண்டாவின் தலைநகரம் கிகாலியில் காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தின் முடிவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் திரு லீ பேசினார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தனக்குத் தேவையான உணவுப்பொருள்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட அளவுக்கு இறக்குமதி செய்கிறது.
கொள்முதல் ஏற்பாடுகளைப் பலமுனைப்படுத்துவதே சிங்கப்பூரில் உணவுப்பொருள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் மிக முக்கிய உத்தியாக இருக்கிறது.
இந்தப் பலமுனை உத்தி காரணமாகவே இப்போது பிரேசில் நாட்டில் இருந்து கோழிகளை சிங்கப்பூர் வாங்குகிறது.
உக்ரேன், போலந்து நாடுகளில் இருந்து முட்டைகளை அது கொள்முதல் செய்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் மோதல் நடப்பதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் உணவுப்பொருள் ஏற்றுமதிக்குத் தாங்கள் தடை விதிப்பதாகவும் சில நாடுகள் அண்மையில் அறிவித்து இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை இந்தியா இந்த மாதம் அறிவித்தது. முன்னதாக அது கோதுமை ஏற்றுமதி கட்டுப்பாடு முடிவு பற்றி தெரிவித்து இருந்தது.
சிங்கப்பூருக்கான கோழி ஏற்று மதியை ஜூன் 1 முதல் மலேசியா நிறுத்தியது. இந்தத் தடை கொஞ்சம் அகற்றப்பட்டுள்ளது.
கோழி, முட்டைகளை வாங்க கூடுதலான இடங்களைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் இப்போது காய்கறிகளை வாங்க புதிய இடங்களைத் தேடி வருகிறது என்றார் பிரதமர்.
"இத்தகைய செயல்களை நாம் செய்ய வேண்டி இருக்கிறது. கொஞ்சகாலமாக நாம் இதை செய்து வருகிறோம்," என திரு லீ தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடரும் என்று தான் கருதுவதாக குறிப்பிட்ட திரு லீ, இதன்தொடர்பில் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டி இருக்கும் என்றார்.
இப்போது இந்தப் பிரச்சினை தொடர்பில் வர்த்தக, தொழில் அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில், சூழ்நிலை யைப் புரிந்துகொண்டு மக்கள் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும். பழக்கவழக்கங்களைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் இந்தச் சிரமமான காலத்தைச் சமாளித்து மீண்டு வருவது மிகவும் எளிதாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.