எரிபொருள் இல்லாத நிலையை எட்டிவிட்ட இலங்கை, கைவசம் உள்ள சிறிதளவு டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியது.
அதேநேரத்தில் இலங்கை பொருளியல் நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை வந்து சேர்ந்தது.
இலங்கையில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையை 15% அதிகரித்து ஒரு லிட்டர் விலை ரூ.460 (S$1.78) ஆக சிலோன் பெட்ரோலிய கழகம் என்ற அமைப்பு உயர்த்தியது.
அதேவேளையில், பெட்ரோல் விலை 22% கூடி லிட்டர் ரூ.550 (S$2.12) ஆகிவிட்டது.
வெளிநாட்டில் இருந்து அடுத்ததாக எப்போது எண்ணெய் வரும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகரா ஓரிரு நாட்களுக்கு முன்புதான் கூறினார்.
இதற்காக அவர் வாகன உரிமையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு பெட்ரோல் நிலையங்களில் வரிசைப்பிடிக்க நிற்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.
எண்ணெய் வந்ததும் நிரப்பிக் கொள்ளலாம் என்று பலரும் தங்கள் வாகனங்களை பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிறுத்திவிட்டு போய்விட்டார்கள்.
இலங்கை வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கிறது. கிட்டத்தட்ட அந்த நாடு நொடித்துப் போகும் நிலையை எட்டிவிட்டது. நாட்டில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நிதி, வெளியுறவு அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கக் குழு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்து உள்ளது.