தற்போதைக்கு கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடத் தேவையில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
வருங்காலத்தில் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் விழிப்புடன் இருப்பதையும் பரிசோதனையை மேற்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்திய திரு வோங், அடுத்த மாதம் மதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும் என்றார்.
நீ சூன் சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் தடுப்பூசி மையத்திற்குச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிஏ.4, பிஏ.5 வகை ஓமிக்ரான் கிருமிப் பரவலால் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதாக திரு வோங் சொன்னார்.
கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் மோசமாக நோய்வாய்ப்படும் சாத்தியம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறி ஏதும் இப்போதைக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளால் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது; அதனால் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடாமல் இந்தக் கிருமிப் பரவல் அலையை சிங்கப்பூரால் கடந்துசெல்லமுடியும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங்குடன் தடுப்பூசி நிலையத்திற்குச் சென்ற திரு வோங் கூறினார்.