காரில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ந்தது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் சத்னம் சிங், 31, என்ற அந்த ஆடவர், கார் நிறுத்துமிடம் ஒன்றில் தமது காரை நிறுத்திவிட்டு, அதனுள் அமர்ந்து இருந்தார். அப்போது துப்பாக்கியுடன் வந்த ஒருவன் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
திரு சத்னம் வசித்த தெருவிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது.
நெஞ்சிலும் கழுத்திலும் குண்டு பாய்ந்த நிலையில், அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு திரு சத்னம் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி, மருத்துவர்கள் கைவிரித்தனர்.
சம்பவம் நிகழ்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்புதான் தம் நண்பர் ஒருவரிடம் இருந்து திரு சத்னம் காரைக் கடனாகப் பெற்றுவந்ததாகவும் அவர் யாரையோ ஏற்றிச் செல்லக் காத்திருந்ததாகவும் தெரிகிறது என்று காவல்துறை தெரிவித்தது.
துப்பாக்கியுடன் வந்தவன், திரு சிங்கைக் கொல்ல வந்தானா அல்லது அந்த காரின் உரிமையாளரைக் கொல்ல வந்தானா என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை அறிக்கை கூறியது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இன்னும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
மாண்ட திரு சிங் அன்பானவர், அமைதியானவர் என்று அவரது அண்டை வீட்டுக்காரரான கிறிஸ்டினா பெர்சாத் என்பவர் கூறியதாக 'நியூயார்க் டெய்லி நியூஸ்' செய்தி தெரிவித்தது.
ஒரு வாரத்திற்கு முன்னர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் சரண் என்ற 25 வயது இளையர், பால்டிமோர் நகரில் தமது காரில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.