கடைசி சில நாள்களில் தனது மகன் உயிருக்குப் போராடியதாக சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி பலியான குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.
திங்கட்கிழமையன்று (27 ஜூன்) கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான ஒரு ஒன்றரை வயது குழந்தை மாண்டதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.
சிங்கப்பூரில் முதன்முறையாக 12 வயதுக்குக்கீழ் உள்ள ஒருவர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்.
மாண்ட குழந்தைக்கு கொவிட்-19 கிருமித்தொற்றால் 'என்செஃப்லைட்டிஸ்' எனும் மூளை வீக்கமும் ஏற்பட்டது.
அதோடு, மேலும் இரண்டு வகை கிருமித்தொற்றுக்கும் குழந்தை ஆளாகிருந்தது.
"இன்று துணிச்சலான, தைரியமான எனது மகன் உயிருக்குப் போராடிய பிறகு அடுத்த உலகிற்குச் சென்றுவிட்டார்," என்று குழந்தையின் தந்தையான திரு ஃபராத் ஷ்பா லிங்ட்இன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கிளவுட்புளூ எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அவர், கடந்த சில நாள்கள் தனக்கு சவாலாக இருந்ததாகக் கூறினார்.
தான் நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிலளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 21ஆம் தேதியன்று கேகே மகளிர் சிறார் மருத்துவமனையின் சிறாருக்கான அவசர சிகிச்சை பிரிவுக்குக் குழந்தை அழைத்து செல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மோசமான காய்ச்சலும் உடல் நடுக்கமும் இருந்த அந்த குழந்தை மறுநாள் சிறாருக்கான தீவிரி சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அதற்கு மோசமான 'மெனிஞ்சோஎன்செஃப்லைட்டிஸ்' எனும் மூளை வீக்கம் ஏற்பட்டது.
மாண்ட குழந்தைக்கு இதற்கு முன் சுகாதாரப் பிரச்சினை ஏதும் இல்லை.
கொவிட்-19, சுகாதாரப் பிரச்சினைகள் இல்லாத சிறுவர்களையும் மோசமாக நோய்வாய்ப்படவைக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சு சுட்டியது.
ஐந்து வயதுக்குகீழ் உள்ள சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் போடுவது பாதுகாப்பானதா என்பதையும் அதன் பலனை அறியவும் ஆராயப்போவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் அவ்வாறு செய்யப்போவதாக அமைச்சு சொன்னது.
இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு சுகாதார அமைச்சு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டது.
தேவையான ஆதரவை வழங்க கேகே மருத்துவமனை குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.