சிங்கப்பூரின் வருங்காலத்தை வடிவமைக்க ஆலோசனைகளை வழங்குமாறு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிந்திய காலத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நிலையில் சிங்கப்பூர் இருப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்களின் ஆலோசனைகள் 'ஃபார்வர்ட் சிங்கப்பூர்' எனும் 'முன்னேறும் சிங்கப்பூர்' பெருந்திட்டத்தில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.
'முன்னேறும் சிங்கப்பூர்' பெருந்திட்டத்தை திரு வோங் செவ்வாய்க்கிழமையன்று (28 ஜூன்) தொடங்கிவைத்தார்.
அந்த வருங்காலத் திட்டம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும்.
சட்டதிட்டங்கள் தொடர்பிலான பரிந்துரைகள், சிங்கப்பூருக்கும் அதன் மக்களுக்கும் இருக்கக்கூடிய ஒரே வகையான இலக்குகளை அடைய சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் எவ்வாறு பங்களிக்கலாம் ஆகியவற்றை வருங்காலத் திட்டம் விவரிக்கும் என்று திரு வோங் சொன்னார்.
ஒன்றுபட்ட மக்கள், சமமாகவும் சரியாகவும் நடந்துகொள்ளும் சமுதாயம் ஆகிய சிங்கப்பூரின் கொள்கைகளின் அடிப்படையில் அவை அமையும் என்று அவர் கூறினார்.
"சிலர் மட்டுமின்றி பலர் பலனடையும் வகையில் சமுதாயமும் நாடு இயங்கும் முறையும் அமையும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்; சில தரப்பினர் மட்டுமின்றி பல்வேறு திறனாளர்கள் பலனடையும் வகையில் அமையவேண்டும்; அவரவர் தனித்தன்மையையும் அவர்களால் சாதிக்கக்கூடியவற்றையும் கொண்டாடும் வகையில் இருக்கவேண்டும்; வாழ்க்கை முழுவதும் தேர்ச்சி பெற அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டும்," என்று திரு வோங் சுட்டினார்.
இம்மாதம் 13ஆம் தேதியன்று துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட திரு வோங், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசினார்.
ஒன் மரீனா புலவார்ட்டில் உள்ள 'என்டியூசி சென்டர்' நிலையத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஓராண்டுக்கு இடம்பெறவுள்ள 'முன்னேறும் சிங்கப்பூர்' பெருந்திட்டத்திற்கு ஆலோசனை திரட்டும் முயற்சியைத் திரு வோங் வழிநடத்துவார்.
வேலை, வீடு, சுகாதாரம் போன்ற ஆறு அம்சங்களாக வருங்காலத் திட்டம் பிரிக்கப்படுள்ளது.
நான்காம் தலைமுறை தலைவர்களான 4ஜி அமைச்சர்கள் அவற்றை வழிநடத்துவர்.
4ஜி குழுவின் தலைவர் பொறுப்பையும் திரு வோங் வகிக்கிறார்