இலங்கை மருத்துவர்கள், இதர மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் நேற்று வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களாக மாறினர். ஆக மோசமான பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக இருந்தது.
மின்சாரத் தடைகள், உணவுக்கும் மருந்துக்கும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்கள் வாரக்கணக்கில் தெருக்களில் நடந்துவருகின்றன. கடந்த மாதம் ஒன்பது பேர் மாண்டதுடன் சுமார் 300 பேர் காயமும் அடைந்ததை அடுத்து இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மட்டுமே போதுமான எரிபொருள் இருப்பதாகத் தெரிவித்த இலங்கை அரசாங்கம், இரு வாரங்களுக்கு ரயில்கள், பேருந்துகள், சுகாதாரப் பிரிவு போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கான விநியோகத்துக்கு நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்தது.
இதற்கிடையே, அத்தியாவசிய சேவை வழங்கும் ஊழியர்களான மருத்துவர்கள், தாதியர், இதர மருத்துவ ஊழியர்கள் எரிபொருள் இன்றி தங்கள் வேலைக்குச் செல்லவே அல்லாடுவதாகக் கூறுகின்றனர்.
"இது சாத்தியப்படாத ஒரு சூழ்நிலை. அரசாங்கம் இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும்," என்று செய்தியாளர்களிடம் கூறினார் இலங்கையின் ஆகப் பெரிய தாதியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஹெ.எம்.மெடிவத்தா.
எரிபொருள் சாவடிகளில் மருத்துவ ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட டோக்கனைக் கொண்டு எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் இப்போது மதிப்பில்லை என்று மெடிவத்தா விளக்கினார்.
"சாவடியில் இருப்பவர்கள் எங்களுக்கு வரிசையில் முன்னுரிமை தருவதில்லை. எங்கள் வேலைக்கு நேரத்துடன் போக முடியவில்லை," என்று அவர் கூறினார்.
பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் இதர சுகாதாரச் சேவை ஊழியர்கள் நேற்றும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் அனைத்து இருப்புகளும் தீர்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கிடையே, படகு வழியாக நாட்டை விட்டுப் போகவும் பலர் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

