சிங்கப்பூர் விரைவில் இந்தோனீசியாவில் இருந்து கோழிகளைப் பெறும்.
குளிரூட்டப்பட்ட, உறைய வைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை அனுப்புவதற்கு உரிய புதிய நாடாக இந்தோனீசியாவை சிங்கப்பூர் அங்கீகரித்து இருக்கிறது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
அங்கீகரிக்கப்பட்ட இந்தோனீசிய நிறுவனங்களிடம் இருந்து கோழிகளை இப்போது இறக்குமதி செய்ய முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில், தாய்லாந்து, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து இப்போது சிங்கப்பூர் கோழிகளை வாங்குகிறது. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் ஃபேஸ்புக்கில் நேற்று இது பற்றி அறிவித்தார்.
கோழிகளை இறக்குமதி செய்யலாம் என்று சிங்கப்பூர் 20 நாடுகளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதில் இப்போது இந்தோனீசியாவும் சேர்ந்து இருக்கிறது.
கோழி கொள்முதலைப் பலமுனைப்படுத்தும் முயற்சிகளில் இது மேலும் ஒரு படி என்று அமைச்சர் தெரிவித்தார்.
உலகளவில் உணவுப்பொருள்களின் விநியோகம் தொடர்ந்து நிச்சயமில்லாமல்தான் இருக்கும்.
இந்த விநியோகத்தில் மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம். விலையும் ஏறி இறங்கலாம் என்பதால் அதற்கேற்ப மனதளவில் நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உணவுப்பொருள் போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
பல்வேறு செயல்திட்டங்களையும் அது அமலாக்கி வருகிறது.
அதேவேளையில், இதில் பயனீட்டாளர்களுக்கும் உணவு தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
பயனீட்டாளர்கள் தங்கள் உணவுப்பொருள் விருப்பங்களைப் பொறுத்தவரை விட்டுகொடுத்து நடந்துகொள்ள வேண்டும். தேவையானபோது மாற்று பொருள்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி செயல்படுவதன் மூலம் சிங்கப்பூரின் மீள்திறன் மேம்படவும் அவர்கள் உதவலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

