பிலிப்பீன்சின் 17வது அதிபராக நேற்று ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கோஸ் குடும்பம் அதிகாரத்திற்கு திரும்பி இருக்கிறது. அந்தக் குடும்பம் அவமானப்பட்டு பிலிப்பீன்சைவிட்டு ஓடிய குடும்பம்.
"இந்த நிகழ்ச்சி ஒரு வரலாற்று முக்கிய நிகழ்ச்சி. மக்களே நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள். இது ஊக்கமளிக்கிறது," என்று பதவி ஏற்கும்போது திரு மார்கோஸ் ஜுனியர் குறிப்பிட்டார்.
புதிய அதிபர் 30 நிமிடங்கள் உரையாற்றினார். நடு நடுவே கை தட்டல்கள் விண்ணைப் பிளந்தன.
தேர்தல் பிரசாரத்தின்போது தன்னுடைய தந்தையின் ஆட்சியை வெகுவாக புகழ்ந்து ஆதரவு திரட்டினார் மார்கோஸ் ஜூனியர்.
நாட்டு மக்களுக்குப் பலவற்றைச் செய்யப்போவதாக குறிப்பிட்டு தன்திட்டங்கள் பற்றி அவர் பரவலாக எடுத்துரைத்தார்.
"என் தந்தை அதிக, சிறந்த சாலைகளை அமைத்தார். அவருக்கு முந்திய நிர்வாகங்களைவிட அதிகமாக அரிசி உற்பத்தியை சாதித்தார்," என்று தனது பேச்சின் முடிவில் மார்கோஸ் ஜூனியர் குறிப்பிட்டார். அவர் மணிலாவில் தேசிய அருங்காட்சியகத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மார்கோஸ் ஜுனியரின் மனைவி லூஸி, 62, அவரின் புதல்வர்கள், அவரின் தாயாரான 92 வயது இமெல்டா, அவரின் சகோதரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தந்தை மார்கோஸ் 1965ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டு காலம் பிலிப்பீன்சை ஆட்சி செய்தார். அந்த ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட பாதிக்காலம் நாடு ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது.
அவருடைய ஆட்சியின் கீழ் ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். கொல்லப்பட்டனர். அரசாங்கப் பணம் பில்லியன் கணக்கில் மாயமானது.
கடைசியில் மார்கோசும் அவருடைய குடும்பத்தாரும் அமெரிக்க விமானத்தில் ஹவாய் தீவுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள்.

