சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) நிறுவனத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் செய்யப்பட்டது.
தவறான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து தங்களது வங்கியில் இந்த நிறுவனம் ரூ.240 கோடி கடன் வாங்கியதாகவும் அந்தக் கடன்தொகையை வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தியதாகவும் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எல். குப்தா அந்தப் புகாரை கொடுத்திருந்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களான மறைந்த பல்லக்கு துரை, பி.சுஜாதா, ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீதும் வழக்குப் போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடன் தொகை, வட்டியுடன் பல மடங்கு அதிகரித்ததாகச் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து கோல்டு பேலஸுக்குச் சொந்தமான பொருள்களைப் பறிமுதல் செய்ய எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத் துறையின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கள்ளப்
பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்தின் அடிப்படையில் இந்நிறு வனத்துக்குச் சொந்தமான ரூ.234.75 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்தக் குற்றத்திற்காக அமலாக்கத்துறை இந்த அளவுக்கு அதிகமான சொத்துகளை முடக்கி இருப்பது இது முதல்முறை என்று கூறப்
படுகிறது.
மற்றொரு சம்பவத்தில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் என்பவரின் ரூ.173.48 கோடி மதிப்பிலான சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கொச்சியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பின் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின், சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி தொழில் மூலம் கிடைத்த ரூ.910 கோடியை மறைத்து 40க்கு மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததும் சட்டவிரோத பணப் பறிமாற்றம் மூலம் சொத்துகளை வாங்கிக் குவித்ததும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

