சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பொருளியல் மந்தநிலையோ கட்டுக்கடங்காத பணவீக்கமோ ஏற்படும் என்று அரசாங்கம் இப்போதைக்கு எதிர்பார்க்கவில்லை.
இருப்பினும் உலகப் பொருளியலில் கணிசமான சவால்கள் தொடர்வதாகவும் சிங்கப்பூர் குறிப்பிட்டத்தக்க சவால்களை எதிர்நோக்குவதாகவும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 4) அன்று மன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
உலகப் பொருளியல் சூழல் மிகச் சவால் மிக்கதாகி விட்டது என்றும் நிலைமை இன்னும் மோசமாகும் அபாயம் அதிகம் என்றும் திரு டான் தெரிவித்தார்.
இருப்பினும் பொருளியல் பின்னடைவை சிங்கப்பூர் இப்போதைக்குத் தவிர்க்கும் என்றார் திரு டான்.
சிங்கப்பூர்ப் பொருளியல் இந்த ஆண்டு 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று வர்த்தக தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.
வளர்ச்சி மூன்று விழுக்காடு முதல் நான்கு விழுக்காட்டுக்குள்தான் இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி மேலும் மெதுவடையக் கூடும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சிங்கப்பூரில் பணவீக்கம் இந்த ஆண்டு மேலும் கூடும் என்று எதிர்பார்ப்பதாக திரு டான் குறிப்பிட்டார்.
ஆனால் பணவீக்கம் உயரக் காரணமான வெளிநாட்டு அழுத்தங்கள் குறைந்தால், பணவீக்கம் இவ்வாண்டு இறுதி வாக்கில் மட்டுப்படலாம் என்றார் திரு டான்.