தெமாசெக் ஹோல்டிங்ஸின் பட்டியலிடப்படாத சொத்துகளின் மதிப்பு 4 மடங்கு அதிகரித்து $210 பில்லியனாகியது
தெமாசெக் நிறுவனத்தின் முதலீடு சாதனை அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதன் முதலாவது முதலீட்டு இடமாக சீனா இருந்தது. ஆனால் இப்போது சிங்கப்பூர் முதலிடத்தில் திகழ்கிறது.
சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்றாலும் தெமாசெக்கின் நிகர முதலீட்டின் மதிப்பு, முதல் தடவையாக $400 பில்லியனைத் தாண்டி இருக்கிறது.
உலகின் அதிக முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் தெமாசெக், நேற்று தனது வருடாந்திர மறு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. 2022 மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் தெமாசெக் $61 பில்லியன் முதலீடு செய்தது.
இதனையும் சேர்த்து அந்த காலகட்டத்திற்கான தெமாசெக்கின் நிகர முதலீடு சாதனை அளவாக $403 பில்லியனாகியது.
இந்த மதிப்பு, சென்ற ஆண்டு மார்ச் முடிவில் $381 பில்லியனாக இருந்தது. தெமாசெக்கின் சிங்கப்பூர் சொத்துகள் இப்போது அதன் முதலீட்டில் 27% ஆகும்.
இந்த அளவு ஓராண்டுக்கு முன் 24% ஆக இருந்தது. சீனாவில் தெமாசெக் முதலீடு 27%லிருந்து 22% ஆகக் குறைந்தது.
இதனிடையே, தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ள பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத சொத்துகளின் மதிப்பு 2022 மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதி ஆண்டில் நான்கு மடங்கு அதிகரித்து $210 பில்லியனாகியது.
இந்த மதிப்பு சுமார் பத்து ஆண்டுக்கு முன் $53 பில்லியனாக இருந்தது. சந்தையில் பட்டிலியடப்படாத முதலீடுகள் ஆண்டுக்கு 10 விழுக்காட்டுக்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்தன.
இத்தகைய முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருவாய், அந்த முதலீடுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போதும் அல்லது விற்கப்படும்போதும் நிறுவனங்களின் வலுவான செயல்திறன் மூலமாகவும் பெறப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி தெமாசெக் குழுமத்தின் முதலீடுகளில் பங்குச் சந்தையில் பட்டிலியடப்படாத சொத்துகளின் மதிப்பு 52% ஆக இருக்கிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டிலியடப்படாத முதலீடுகளில் 36%க்கு பொறுப்பு வகிக்கின்றன.
இதர தனியார் நிறுவனங்களும் தொடங்கி அதிக காலம் ஆகாத நிறுவனங்களும் 26% முதலீட்டுக்கு பொறுப்பு வகிக்கின்றன.
சொத்து நிர்வாக நிறுவனங்கள் 20%ஐ தங்கள் வசம் கொண்டுள்ளன. தனியார் பங்குமுதல் மற்றும் கடன் நிதி 18% அளவுக்கு உள்ளன.
மேப்பிள்ட்ரீ, எஸ்பி குழுமம், பிஎஸ்ஏ போன்ற முதிர்ச்சியடைந்த நிறுவனங்களிடம் இருந்து நிலையாக கிடைக்கும் லாபஈவுகள் மூலம் தெமாசெக்கின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத முதலீடுகள் வருவாயைப் பெருக்கித் தருக்கின்றன.
கடந்த பல ஆண்டுகளில் தெமாசெக் பலப்படுத்தி வந்திருக்கும் உயர்தர முதலீட்டு நிதியில் இருந்து வருவாய் விநியோகிக்கப்படுகிறது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத சொத்துகள் பட்டியலிடப் படும்போது அல்லது விற்கப்படும்போது வருவாய் கிடைக்கிறது என்று தெமாசெக் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்தது.

